பகவான் கிருஷ்ணரை போல.. உபியை பாதுகாக்கிறார் யோகி ஆதித்யநாத்.. நிதின் கட்கரி புகழாரம்
ஒருகாலத்தில் உத்தரபிரதேசம் என்றாலே ரவுடிகளின் சாம்ராஜ்ஜியம்தான் அனைவரின் நினைவிலும் வரும். ஆனால், இன்றோ உத்தரபிரதேசம் சொர்க்கபுரியாக மாறிவிட்டது.
லக்னோ: பகவான் ஸ்ரீகிருஷ்ணரை போல தீய சக்திகளிடம் இருந்து உத்தரபிரதேசத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் பாதுகாத்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புகழாரம் சூட்டினார்.
உத்தரபிரதேசத்தில் முதல்வராக பதவியேற்றதுமே, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார் யோகி ஆதித்யநாத். உபியில் எந்தக் குற்றச்செயல்களும் நடக்கக்கூடாது என்பதே காவல்துறையினருக்கு அவர் போட்ட முதல் உத்தரவாக இருந்தது. இதையடுத்து, ஒவ்வொரு குற்றச்செயல்களுக்கும் தனித்தனி போலீஸ் படையை அமைப்பது என்ற திட்டத்தை முதல்வர் யோகி ஆதித்யநாத் செயல்படுத்தினார்.
அதன்படி, பெண்களை கேலி செய்பவர்களையும், பாலியல் தொல்லை அளிப்பவர்களையும் களையெடுப்பதற்காக தனிப் போலீஸ் பிரிவே உத்தரபிரதேசத்தில் உருவாக்கப்பட்டது. அதேபோல, ரவுடிகளை கட்டுப்படுத்தவதற்காக போலீஸில் ஒரு பிரிவினர் பணியமர்த்தப்பட்டனர். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகளால் உத்தரபிரதேசத்தில் குற்றச்சம்பவங்கள் கணிசமாக குறைந்து வருகின்றன. மேலும், யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவியேற்ற 6 ஆண்டுகளில் 178 ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
வேற லெவலில் மாறும் அரசு பள்ளிகள்.. முழு கவனமும் மாணவர்கள் மீதுதான்.. முதல்வர் யோகியின் அடுத்த அதிரடி
அமெரிக்காவுக்கு இணையான சாலைகள்
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தில் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் சர்வதேச தரத்திலான நெடுஞ்சாலைகளை அமைக்கும் திட்டங்களுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: உத்தரபிரதேசத்தில் தற்போது அமைக்கப்படும் நெடுஞ்சாலைகள் அமெரிக்க நெடுஞ்சாலைகளின் தரத்தில் இருக்கும். இனி அமைக்கப்படும் நெடுஞ்சாலைகளும் சர்வதேச தரத்தில்தான் இருக்கும்.
ரவுடிகள் சாம்ராஜ்யம் முடிந்துவிட்டது
இந்த நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்ட பிறகு, நாம் இந்தியாவில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்ற சந்தேகம் உபி மக்களுக்கு வந்துவிடும். மேலும், லக்னோவில் இருந்து டெல்லிக்கு விமானத்தில் போவதை விட சாலை மார்க்கமாகவே சென்றுவிடலாம் என நினைக்கும் அளவுக்கு சாலைகளின் தரம் இருக்கும். ஒருகாலத்தில், உத்தரபிரதேசம் என்றாலே ரவுடிகளின் சாம்ராஜ்ஜியம்தான் அனைவரின் நினைவிலும் வரும். எங்கு பார்த்தாலும் கொலைகளும், பாலியல் குற்றங்களும் நிறைந்திருக்கும். ஆனால், இன்றோ உத்தரபிரதேசம் சொர்க்கபுரியாக மாறிவிட்டது.
சிறப்பான சட்டம் ஒழுங்கு
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியில் ரவுடிகள் வாலை சுருட்டிக்கொண்டு வீடுகளுக்குள் முடங்கிவிட்டனர். பல ரவுடிகள் வேறு மாநிலங்களுக்கு சென்று தஞ்சம் அடைந்துவிட்டனர். அந்த அளவுக்கு, உபியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுகிறது. சிறப்பான சட்டம் ஒழுங்கு இருப்பதால்தான் உபியில் தற்போது தொழிற்சாலைகளும், தொழில் நிறுவனங்களும் குவியத் தொடங்கி இருக்கின்றன.
பகவான் கிருஷ்ணரை போல..
இதற்கு முழுக்க முழுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத்தே காரணம். பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு வசனம் கூறுவார். "எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்குகிறதோ அப்பொதெல்லாம் நான் அவதாரம் எடுப்பேன்" என அவர் கூறுவார். அதேபோல, உத்தரபிரதேசத்தை பாதுகாக்கவும், தர்மத்தை நிலைநாட்டவும் யோகி ஆதித்யநாத் வடிவில் பகவான் கிருஷ்ணர் அவதாரம் எடுத்திருக்கிறார் என்றே நான் கருதுகிறேன். இவ்வாறு நிதின் கட்கரி கூறினார்.