உ.பியில் பாஜக முன்னாள் எம்பி காங்கிரசுக்கு தாவல்.. தலித் வாக்குகள் காலி? ஷாக்கில் பாஜக
லக்னோ:உத்தரப் பிரதேசத்தில் பாஜகவைச் சேர்ந்த பெண் எம்.பி. சாவித்ரி புலே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பஹாரியாச் தொகுதியிலிருந்து பாஜக சார்பில் 2014ம் ஆண்டு போட்டியிட்டு எம்.பி.யானவர் சாவித்ரி புலே. ஆனால், கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார்.
உத்தரப்பிரதேச கிழக்குப்பகுதியில் தலித் சமூகத்தில் முக்கிய தலைவராக சாவித்ரி புலே உள்ளார். ஆனால், பாஜகவில் தலித்துகளுக்கு மதிப்பில்லை, நசுக்கப்பார்க்கிறார்கள் என்று தொடர்ந்து சாவித்ரி புலே குற்றம் சாட்டி வந்தார். இந்நிலையில், கட்சித் தலைமையின் மீது அதிருப்தி அடைந்த சாவித்ரி புலே காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
பாஜக சூப்பர்.. நல்ல வேகமாக சாலை போட்டு இருக்காங்க.. புகழ்ந்து தள்ளிய ப.சிதம்பரம்!
காங்கிரசில் இணைப்பு
டெல்லியில் ராகுல் காந்தி இல்லத்தில் ராகுலையும், பிரியங்கா காந்தியையும் சந்தித்துப் பேசி, தங்களை முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். இதுகுறித்து பேசிய சாவித்ரி புலே, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து நாட்டின் அரசமைப்பைக் காக்க விரும்புகிறேன். காங்கிரஸ் கட்சியின் கரங்களை வலுப்படுத்தி பாஜகவைத் தடுக்கப் போகிறேன் என்றார்.
பெரும் பின்னடைவு
பஹாரியாச் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பியான சாவித்ரி புலே காங்கிரஸ் கட்சியில் இணைந்து பாஜகவுக்கு பெரும் பின்னடைவாகும். தலித் வாக்குகள் பெரும்பாலும் பஹாரியாச்சில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு திரும்பும்.
முன்னாள் எம்பி
அதேபோல சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் எம்பியுமான ராகேஷ் சச்சன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 2009ம் ஆண்டு பதேபூர் தொகுதியின் எம்பியாக இருந்த ராகேஷ் சச்சன், முலாயம் சிங் முதல்வராக இருந்தபோதும், அகிலேஷ் யாதவ் அரசிலும் எம்எல்ஏவாக இருந்தவர். இவர் காங்கிரஸ் கட்சிக்குச் சென்றது அந்த கட்சிக்குப் பலத்தை அதிகரிக்கும்.
பகுஜன் சமாஜ் கட்சி
இது தொடர்பாக அரசியல் திறனாய்வாளர்கள் கூறியதாவது:வரும் லோக்சபா தேர்தலில் பதேபூர் தொகுதியில் ராகேஷ் சச்சனுக்கு சீட் கிடைக்க வாய்ப்பு இருந்தது. ஆனால், பகுஜன் சமாஜ் கட்சியுடன், சமாஜ்வாதி சேர்ந்து, பதேபூர் தொகுதி, பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.
அதிருப்தியால் இணைப்பு
அதனால், அதிருப்தி அடைந்த ராகேஷ் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். சமாஜ்வாதி மூத்த தலைவர் ஒருவர் அந்தக் கட்சியில் இருந்து விலகியது, அந்த கட்சிக்கு பின்னடைவுதான். உத்தரப்பிரதேச கிழக்குப் பகுதியில் பாஜக, சமாஜ்வாதிக் கட்சியின் இரு முக்கிய தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது அந்த கட்சிக்கு ஊக்கமாக அமையும் என்று கூறினர்.
காங்கிரசுக்கு ஊக்கம்
இதற்கிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், தேர்தல் நேரம் நெருங்கும் போது, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், பாஜகவிலிருந்து ஏராளமானோர் விலகி காங்கிரஸ் கட்சியில் இணைய உள்ளனர். இப்போது இரு தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது கட்சிக்கு ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளது.