ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய உத்தரவிட்ட நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்.. பாதுகாப்பை அதிகரித்த போலீஸ்!
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் வீடியோ பதிவு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிட்ட நீதிபதிக்கு மிரட்டல் விடுத்து கடிதம் அனுப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள இஸ்லாமிய வழிபாட்டுதளமான ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதியின் வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு முழுவதும் வழிபட அனுமதிக்க வேண்டும் என இந்து மதத்தைச் சேர்ந்த 5 பேர் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், ஞானவாபி மசூதி வளாகத்தில் வீடியோ பதிவுடன் கூடிய கள ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து நீதிமன்ற ஆணையர் அஜய் மிஸ்ரா தலைமையிலான குழு, மசூதியில் 3 நாட்கள் ஆய்வு நடத்தியது.
ஞானவாபி மசூதியில் பூஜை செய்ய முயற்சி! மடத்திலேயே தடுக்கப்பட்ட சாமியார்! பரபர உத்தரபிரதேசம்
சிவலிங்கம் கண்டுபிடிப்பு?
இந்த ஆய்வின் போது ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதனால் மசூதி அமைந்துள்ள பகுதிக்குள் நுழைய வாரணாசி நீதிமன்றம் தடை விதித்தது. இதனிடையே நீதிமன்ற ஆணையர் நடத்திய ஆய்வின் ஒரு பகுதி அறிக்கை மட்டும் வெளியே கசிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீதிபதிக்கு மிரட்டல்
ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வீடியோ பதிவு செய்து ஆய்வு நடத்த உத்தரவிட்ட நீதிபதி ரவிக்குமார் திவாகருக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதம் இஸ்லாமிய ஆகாஸ் இயக்கத்தைச் சேர்ந்த காசிஃப் அஹ்மத் சித்திக் என்பவரால் எழுதப்பட்டுள்ளது.
கடிதத்தில் என்ன எழுதப்பட்டிருந்தது?
அந்தக் கடிதத்தில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்துவது வழக்கமான நடைமுறைதான் என்று கூறுகிறீர்கள். நீங்கள் ஒரு இந்துமத வழிப்பாட்டாளர். மசூதியை கோயிலாக அறிவிப்பீர்கள். ஒரு இந்து நீதிபதியிடம் இருந்து எந்தவொரு இஸ்லாமியரும் நீதியை எதிர்பார்க்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலீஸ் தீவிர விசாரணை
இதுகுறித்து நீதிபதி ரவிக்குமார் திவாகர் போலீஸாரிடம் புகாரளித்துள்ளார். இந்த புகார் குறித்து துணை ஆணையர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நீதிபதியின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 9 போலீஸார் நீதிபதியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட்கு வருகின்றனர்.