என்ன இருந்தாலும் நியாயம் வேணாமா.. காதலியின் தந்தையை விசித்திரமாக பழிவாங்கிய நபர்.. டிவிஸ்ட் பாருங்க
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் தனது காதலியின் தந்தையை பழிவாங்க அவரது செல்போனிலிருந்து முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் பேகம்பூர்வா பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவருக்கு 17 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இந்நிலையில் இதே பகுதியில் வேலை செய்துவரும் அமீன்(19) எனும் இளைஞருக்கும் இந்த சிறுமிக்கும் சில மாதங்களுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டுள்ளது. சில நாட்கள் வரை நட்பாக பேசி வந்த அமீன் சிறுமியை காதலிப்பதாக கூறியுள்ளார். சிறுமிக்கு தொடக்கத்தில் எதுவும் புரியவில்லை. அமீன் விளையாட்டாகதான் எதையோ செய்கிறார் என்று கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்.

ஆனால் அமீன் தனது முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார். எனவே மீண்டும் மீண்டும் தனது காதலை தெரிவித்திருக்கிறார். சிறுமி தொடர்ந்து மறுத்து வரே ஒரு கட்டத்தில் அமீன் சிறுமிக்கு டார்ச்சர் கொடுக்க தொடங்கியுள்ளார். இதை பொறுத்துக்கொள்ள முடியாத சிறுமி தனது தந்தையிடம் முறையிட்டுள்ளார். இதனையடுத்து சிறுமியின் தந்தை இது தொடர்பாக சிறுவனை அழைத்து விசாரித்திருக்கிறார். தனது மகளை மேலும் தொந்தரவு செய்யக்கூடாது என்றும் எச்சரித்திருக்கிறார்.
இதனை மனதில் வைத்துக்கொண்ட அமீன் அவரை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று யோசித்து வந்திருக்கிறார். இப்படி இருக்கையில்தான் சிறுமியின் தந்தையினுடைய செல்போன் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் காணாமல் போயுள்ளது. இது குறித்து தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் கடந்த 23ம் தேதி இரவு 10.30 மணியளவில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
அதாவது காவல்துறையின் 112 எனும் அவசர எண்ணுக்கு "நான் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விரைவில் கொன்றுவிடுவேன்" என்று மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. இது காவல்துறையினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட செல்போன் எண் எது என்று தேட தொடங்கினர். செல்போன் எண் பேகம்பூர்வாவை சேர்ந்த ரிக்ஷா ஓட்டுநருடையது என்பதை கண்டுபிடித்துள்ளனர். அவரை கைது செய்து விசாரணை செய்ததில் அவருடைய செல்போன் ஏற்கனவே தொலைந்துபோனதால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து காணாமல் போன செல்போன் குறித்து விசாரிக்க தொடங்கியுள்ளனர். அதுவரை மந்ந கதியில் நடைபெற்று வந்த விசாரணை இந்த விவகாரத்திற்கு பின்னர் சூடுபிடிக்க தொடங்கியது. ரிக்ஷா ஓட்டுநருடன் யார் யார் எல்லாம் தொடர்பில் இருந்தனர்? யார் யார் எல்லாம் இவருக்கு எதிராக இருந்தனர்? என்கிற கோணத்தில் விசாரணையை போலீஸ் தொடங்கியது. அப்படிதான் அமீன் மீது சந்தேகம் ஏற்பட்டது. அமீன் இந்த ரிக்ஷா ஓட்டுநரின் மகளை காதலிப்பதாக தொடர்ந்து தொந்தரவு செய்து வந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து அமீனிடம் காவல்துறையினர் கிடுக்குப்பிடி விசாரணையை தொடங்கினர். விசாரணையில் அமீன்தான் தனது காதலியின் தந்தையான ரிக்ஷா ஓட்டுநரை பழிவாங்க அவருடைய செல்போனை திருடி அந்த எண்ணிலிருந்து யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் விடுத்ததை அமீன் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அமீன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications