காளி.. லீணா மணிமேகலைக்கு ஆதரவாக மது, இறைச்சி என வாய்விட்ட.. மம்தா கட்சி எம்.பி மீது பாய்ந்தது வழக்கு
லக்னோ: காளி ஆவணப்படம் தொடர்பான போஸ்டர் விவகாரத்தில் லீனா மணிமேகலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்த மம்தா பானர்ஜி கட்சியின் பெண் எம்பி மஹுவா மொய்த்ரா மீது மத்திய பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மதுரையை சேர்ந்தவர் லீனா மணிமேகலை. இவர் ஆவணப்படங்கள் தயாரித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இந்து தெய்வமான காளி குறித்த ஆவணப் படத்தை தயாரித்துள்ளார்.
இது கனடாவின் ‛ஆகா கான்' அருங்காட்சியகத்தில் வெளியானது. இதையொட்டி படத்தின் போஸ்டரை லீனா மணிமேகலை வெளியிட்டு இருந்தார்.
பாஜகவை எதிர்க்க வலுவான தலைவர் இல்லையா? என்ன சொல்றீங்க? ஸ்டாலின் இருக்காரே! மே.வங்க எம்பி மஹுவா பளீர்
லீனா மணிமேகலை மீது வழக்கு
அதில், காளி வேடமணிந்த பெண் புகை பிடிப்பது போலவும், ஓரினச்சேர்க்கையாளர்களின் வானவில் கொடியை கையில் ஏந்தியிருப்பது போன்றும் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்து கடவுளை லீனா மணிமேகலை அவமரியாதை செய்துள்ளதோடு, இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திவிட்டார் என எதிர்ப்புகள் கிளம்பின. இதுதொடர்பாக லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என டெல்லி, உத்தரபிரதேசம் உள்பட இந்தியாவின் பல்வேறு இடங்களில் உள்ள போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டுள்ளன. வழக்குகளும் பதிவாகி உள்ளன.
திரிணாமுல் எம்பி சர்ச்சை கருத்து
இதற்கிடையே லீனா மணிமேகலைக்கு ஆதரவாகவும், எதிராகவும் அரசியல் கட்சிகள் கருத்துகள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்பி மஹுவா மொய்த்ரா இதுபற்றி கருத்து தெரிவித்து இருந்தார். அப்போது அவர்,
‛‛என்னை பொறுத்தவரை மாமிசம், மதுபானத்தை ஏற்றுக்கொள்ளும் தெய்வம் தான் காளி. தெய்வங்களை கற்பனை செய்து கொள்ள சுதந்திரம் உள்ளது. சில இடங்களில் கடவுள்களுக்கு விஸ்கி படைக்கப்படுகிறது. சில இடங்களில் இது தவறானதாக உள்ளது. சிக்கிம் சென்றால் காளிக்கு விஸ்கி வழங்கப்படுகிறது. அதேநேரத்தில் உத்தர பிரதேசத்தில் வேறு மாதிரியாக உள்ளது'' என்றார்.
எம்பி மீதும் பாய்ந்த வழக்கு
இவரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து மஹுபா மொய்த்ரா மீதும் புகார்கள் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய பிரதேச மாநிலம் போபால் போலீசார் மஹுபா மொய்த்ரா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனை சட்டம் 295 ஏ (மதஉணர்வுகளை புண்படுத்துதல்)பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மம்தா கட்சி எதிர்ப்பு
முன்னதாக மஹுபா மொய்த்ராவின் கருத்து அவரது சொந்த கருத்து என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் கூறியது. இதையடுத்து மஹூபா மொய்த்ரா அந்த டுவிட்டர் பக்கத்தை பாலோ செய்வதை கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.