உ.பி. தேர்தலில் அகிலேஷ் கட்சியுடன் கூட்டணி- 13 பாஜக எம்.எல்.ஏக்கள் விலகப் போறாங்க.. சரத்பவார் சரவெடி
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று அதன் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல்கள் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் மார்ச் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

கோவாவில் மெகா கூட்டணி?
கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் போல மெகா கூட்டணி அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகியவை இணைந்து மெகா கூட்டணியை அமைக்க உள்ளன. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்துள்ளன. வெளிநாட்டில் இருந்து திரும்பிய மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இது குறித்து ஆலோசனை நடத்தினார்.

2 நாளில் அறிவிப்பு
இதனை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக சரத்பவார் கூறியதாவது: கோவா, மணிப்பூர், உ.பி. சட்டசபை தேர்தல்களில் தேசியவாத காங்கிரஸ் கட்சி போட்டியிடும். மணிப்பூரில் காங்கிரஸுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளோம். கோவாவில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அடுத்த 2 நாட்களில் இந்த பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வரும்.

13 பாஜக எம்.எல்.ஏக்கள் வெயிட்டிங்
உத்தரப்பிரதேசத்தில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி மற்றும் சிறிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளோம். உத்தரப்பிரதேசத்தில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் எங்கள் கூட்டணியால் நிச்சயம் மாற்றத்தை தர முடியும். உ.பி.யில் மதரீதியாக வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜக முயற்சிக்கிறது. ஆனால் தேர்தலில் மக்கள் இதற்கு சரியான பாடத்தைத் தருவார்கள். உ.பி.யில் இப்போதுதான் சில பாஜக எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்துள்ளனர். மொத்தம் 13 பாஜக எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் சேர உள்ளனர். இவ்வாறு சரத்பவார் கூறினார்.

உ.பி.யில் பாஜகவுக்கு ஷாக்
உத்தரப்பிரதேசத்தில் பாஜக அமைச்சர் ஸ்வாமி பிரசாத் மவுரியா மற்றும் 3 பாஜக எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து இன்று ராஜினாமா செய்தனர். அத்துடன் அகிலேஷ் யாதவை சந்தித்து சமாஜ்வாதி கட்சியிலும் இணைந்தனர். இந்த நிலையில் மொத்தம் 13 பாஜக எம்.எல்.ஏக்கள் அக்கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைவார்கள் என சரத்பவார் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications