உ.பியில் கடந்த 5 ஆண்டுகளாக கலவரமே இல்லை.. மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்கிறது.. யோகி ஆதித்யநாத்!
லக்னோ: உத்தர பிரதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளாக கலவரங்கள் எதுவும் இல்லை என்றும் கலவரம் இல்லாத இடமாக மாறியிருப்பதால், முதலீட்டாளர்களின் விருப்பமான இடமாக மாநிலம் உருவாகியிருப்பதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:

எந்த கலவரமும் நடைபெறவில்லை
உத்தர பிரதேசத்தில் கடந்த ஐந்தரை ஆண்டுகளாக எந்த கலவரமும் நடைபெறவில்லை. தற்போது நமது மாநிலம் அதிகப்படியான முதலீடுகளை பெறத்தொடங்கியுள்ளது. வேலைவாய்ப்புகள் பெருகிவருகின்றன. வர்த்தகர்கள் மற்றும் தொழில் முனைவோரின் பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்து கொள்ள மாட்டோம். அவர்களின் பாதுகாப்பு மீறப்படுவதை அரசு ஒருபோதும் அனுமதிக்காது.

மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்கிறது
தற்போது நெடுஞ்சாலைகளும் விரைவுச்சாலைகளும் உத்தரபிரதேசத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன. உத்தரபிரதேசம் முற்றிலும் கலவரம் இல்லாத மாநிலமாகவும், குற்றம் இல்லாத மாநிலமாகவும் மாறிவிட்டது'' என்றார். தொடர்ந்து தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளை சுட்டிக்காட்டி பேசிய யோகி ஆதித்யநாத், ''எனது ஆட்சியின் கீழ் எந்த வகுப்புவாத கலவரமும் நடைபெறவில்லை. மாநிலம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது.

மாவட்டத்துக்கு ஒரு மருத்துவக் கல்லூரி
ஒரு மாவட்டத்தில் ஒரு மருத்துவக்கல்லூரி என்ற இலக்கை எட்ட உத்தர பிரதேச அரசு முழு மூச்சுடன் பணியாற்றி வருகிறது. பிஜ்னோர் - மோராதாபாத் நான்கு வழிச்சாலை பணிகள் முடிவடைந்துவிட்டன. அதேபோல், ரேஹார், கஹரிபூர், பாடிகர், சூரஜ்நகர் சாலைகள் விரிவுபடுத்த 51.81 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ. 281 கோடி மதிப்பில் மகாத்மா விதூர் அரசு மருத்துவக் கல்லூரி கட்டும் பணியும் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. அடுத்த பருவ ஆண்டில் இருந்து பிஜ்னோர் மாணவர் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கை பெறுவதே எங்கள் இலக்கு ஆகும்.

பெண் போலீசாருக்கும் குடியிருப்பு வசதிகள்
கல்வி, சுகாதாரம், மருத்துவம் என பல்வேறு துறைகளில் வளர்ச்சிப்பணிகளை அரசு முழுவீச்சில் செயல்படுத்தி வருகிறது. வேலை வாய்ப்புகளை பெருக்குவதே எங்களின் முதன்மை பணியாகும். இதற்கு முன்பு போலீசாருக்கு வீடு வசதிகள் இல்லை. ஆனால், தற்போது போலீசாருக்கு அதி நவீன வசதிகளுடன் குடியிருப்பு வசதிகள் கட்டப்பட்டு வருகின்றன. பெண் போலீசாருக்கும் குடியிருப்பு வசதிகள் செய்து தரப்படும்'' என்றார்.












Click it and Unblock the Notifications