காங்., சமாஜ்வாதிக்கு ஆப்பு... உ.பி. சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி போட்டி!
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 100 இடங்களில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளது. இதனால் சிறுபான்மையினர் வாக்குகளுக்கு குறிவைத்து காத்திருக்கும் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சிகளுக்கு கடும் நெருக்கடி உருவாகி உள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போதே மும்முரமாக தொடங்கிவிட்டன.
கல்வி கட்டணம் எவ்வளவு.. 'டிசி', ஆன்லைன் கிளாஸ், தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு '6' அறிவுறுத்தல்
2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக 312 இடங்களில் வெற்றி பெற்றது; சமாஜ்வாதி கட்சி 47 இடங்களிலும் பகுஜன் சமாஜ் 19 இடங்களிலும் வென்றன. ஒருகாலத்தில் உ.பி.யை ஆண்ட காங்கிரஸ் கட்சி வெறும் 7 இடங்களில்தான் வெல்ல முடிந்தது. அப்னா தள் கட்சி 9 தொகுதிகளைக் கைப்பற்றியது.
பாஜக டார்கெட்
இந்த தேர்தலிலும் 300க்கும் அதிகமான இடங்களில் வெல்ல வேண்டும் என்பது பாஜகவின் இலக்காக. இதற்காக படுதீவிரமாக தேர்தல் வேலைகளை பாஜக மேற்கொண்டு வருகிறது. தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது பாஜகவிலும் கடு அதிருப்தி இருக்கிறது; மக்களிடத்திலும் அதிருப்தி உள்ளது. இதனை சரி செய்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பாஜக உள்ளது.
காங்கிரஸ் போராடும் நிலை
காங்கிரஸ் கட்சி இழந்து போன செல்வாக்கை மீட்பதில் கவனமாக உள்ளது. பிரியங்கா காந்தி தலைமையில் உ.பி. தேர்தலை காங்கிரஸ் கட்சி எதிர்கொள்கிறது. சிறுபான்மையினர் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்யும் வகையில் உலமாக்கள் கூட்டத்தை அண்மையில் காங்கிரஸ் நடத்தி இருந்தது.
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்
இதேபோல சமாஜ்வாதி கட்சியும் சிறுபான்மை வாக்குகளுக்கு குறிவைத்துள்ளது. தலித் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அறுவடை செய்ய முயற்சிக்கிறது. இந்த கோதாவில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும் குதித்துள்ளது.
100 இடங்களில் ஓவைசி கட்சி போட்டி
உத்தரப்பிரதேசத்தில் 100 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி மாநில தலைவர் செளகத் அலி தெரிவித்துள்ளார். இந்த 100 தொகுதிகளிலும் பூத் கமிட்டியும் போட்டுவிட்டது ஓவைசி கட்சி. முஸ்லிம் வாக்குகளை குறிவைத்து ஓவைசி கட்சி களமிறங்க உள்ளது.
பீகாரில் சாதனை
பீகார் தேர்தலில் ஓவைசி கட்சி தனித்துப் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்ற முடியாமல் போனதற்கு ஓவைசி கட்சி வாக்குகளைப் பிரித்ததுதான் காரணம் என்றும் பாஜகவின் பி டீம் ஓவைசி கட்சி என்றும் விமர்சிக்கப்பட்டது.
உ.பி.யில் என்ன செய்யும் ஓவைசி கட்சி?
ஆனால் அண்மையில் நடந்து முடிந்த தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் ஓவைசி கட்சி சோபிக்கவில்லை. உத்தரப்பிரதேசத்திலும் 2017 தேர்தலில் வெறும் 0.2% வாக்குகளைத்தான் ஓவைசி கட்சி பெற்றிருந்தது. இருந்தபோதும் உ.பி.யில் ஓவைசி கட்சி ஏற்படுத்த போகும் தாக்கம் பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது.