ரிஷப்ஷனில் பொண்ணுக்கு முத்தம் கொடுத்த மாப்பிள்ளை.. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன பஞ்சாயத்து
ல்க்னோ: உத்தர பிரதேசத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது முத்தம் கொடுத்ததால் கோபம் அடைந்த மணப்பெண், மணமகனுக்கு எதிராக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததோடு, இனி இவரோடு வாழ மாட்டேன் எனக்கூறியது திருமணவீட்டில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டு இருக்கிறது
உத்தர பிரதேசத்தின் சம்பல் பகுதியை கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவீட்டார் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்ற இந்த திருமணம் மிகவும் வெகுவிமர்சையாக நடைபெற்றது.
திருமணம் முடிந்த பிறகு ஒருநாள் கழித்து அதாவது 28 ஆம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
மணப்பெண்ணுக்கு முத்தம்
மணமக்களின் ஊரான பவசா கிராமத்தில் விருந்துகளுடன் தடல் புடலாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. விருந்தினர்களும் வந்து மணமக்களை வாழ்த்தி விட்டு சென்று கொண்டிருந்தனர். திருமண நிகழ்ச்சியில் சுமார் 300 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர். அப்போது மேடையில் நின்று கொண்டிருந்த மணமகன் திடீரென தனது மனைவியான மணப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்தார். இதில் மணப்பெண் திடீரென அதிர்ச்சியடந்தார்.
எப்படி முத்தம் கொடுக்கலாம்
கோபம் அடைந்த மணப்பெண்ணோ அனைவரது முன்னாலும் எனக்கு எப்படி முத்தம் கொடுக்கலாம் என்று ஆவேசத்துடன் மணமகன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப் போவதாக கூறியிருக்கிறார். மணப்பெண்ணின் வீட்டினர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கோபம் குறையாத மணப்பெண், நேரடியாக சென்று காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவர் மீது புகார் கொடுத்தார்.
வீட்டிலேயே இருந்து கொள்கிறேன்
தனது புகாரில், "இவருடன் இனி நான் வாழ விரும்பவில்லை. நான் எனது வீட்டிலேயே இருந்து கொள்கிறேன். இவரது நடத்தை சரியில்லை. 300 பேர் முன்னிலையில் இப்படி நடந்து கொள்ளும் ஒரு நபர் எப்படி திருந்த போகிறார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். ஆனால் மணமகனிடம் விசாரித்த போது, அவர் நடந்ததே வேற விஷயம்ங்க.. என்று புது கதையை சொன்னார்.
பந்தயம் வைத்துக்கொண்டோம்
இது தொடர்பாக மணமகன் கூறுகையில், எனக்கும் எனது மனைவிக்கும் (மணப்பெண்ணுக்கும்) ஒரு பந்தயம் இருந்தது. அனைவரது முன்னிலையிலும் உன்னை கிஸ் செய்தால் 1,500 ரூபாய் எனக்கு நீ தர வேண்டும் என்றும்.. அவ்வாறு கொடுக்காவிட்டால் நான் ரூபாய் 3 ஆயிரம் தருகிறேன் என்றும்.. பந்தயம் வைத்துக்கொண்டோம்" என்றார். இது குறித்து போலீசார் மணப்பெண்ணிடம் விசாரித்தனார்.அப்போது எங்களுக்குள் இப்படி ஒரு பந்தயமே வைக்கவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.
முத்தம் கொடுத்தது ஒரு பிரச்சினையா
இதன் பிறகு இரு தரப்பினரையும் போலீசார் சமாதானம் செய்தனர். நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு வீட்டாரும் சமாதானம் அடைந்து ஒற்றுமையாக திரும்பியிருக்கின்றனர். காதலர்களும் சில புதுமண ஜோடிகளும் பீச், பார்க் என பொது இடங்களில் கூட கொஞ்சிக்கொள்ளும் இந்தக் காலத்தில் முத்தம் கொடுத்ததால் போலீஸ் ஸ்டேஷன் வரை புகார் அளித்து இருக்கிறாரே.. என்று அப்பகுதி மக்கள் சிலர் பேசிக்கொண்டனர்.
மறக்க முடியாத நிகழ்வாக
வேறு சிலரோ... மணமகன் மீதும் குறை கூறி தங்களுக்குள் விவாதித்துகொண்டனர். எது எப்படியோ விருந்து தடல் புடலால் மறக்க முடியாத அளவுக்கு இருக்க வேண்டிய திருமண வரவேற்பு நிகழ்ச்சி போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று பிரபலம் ஆகி மறக்க முடியாத நிகழ்வாக மாறிவிட்டதே என்று திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறவினர்கள் தங்களுக்குள் முனுமுனுத்தபடி இருந்தனர்.