‛‛எம்ஜிஆர் காலத்து டெக்னிக்’’.. வெயிலை சமாளிக்க மேடையில் ராகுல் செய்ததை பாருங்க! பரவும் வீடியோ
லக்னோ: உத்தர பிரதேச லோக்சபா தேர்தல் பிரசாரத்தின்போது இன்னும் 7 நாட்கள் தான் பிரதமராக மோடி இருப்பார் என மேடையில் பேசிய ராகுல் காந்தி வெப்பஅலையை சமாளிக்க எம்ஜிஆர் காலத்து டெக்னிக்கை பயன்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
நம் நாட்டில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 6 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. கடைசி மற்றும் 7 வது கட்ட லோக்சபா தேர்தல் வரும் ஜுன் 1ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த கடைசி கட்ட தேர்தலில் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 12 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 80 லோக்சபா தொகுதிகள் உள்ள நிலையில் 68 இடங்களுக்கு தேர்தல் நடந்து முடிந்துவிட்டது.
இந்நிலையில் தான் ஜுன் 1ல் கடைசி கட்டமாக 12 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி போட்டியிட்டுள்ள வாரணாசி, கோரக்பூர், குஷி நகர், தியோரியா, பன்சான், கோஷி, சலீம்பூர், பலியா, காசிப்பூர், சந்தாலி, மிர்சாபூர், ராபர்ட்கஞ்ச் உள்ளிட்ட தொகுதிகளுக்கு ஜுன் 1ல் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் கடைசி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே தான் இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் ருத்ராபூரில் பிரசாரம் செய்தார். அங்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பேசினார். அப்போது அவர், ‛‛நாம் அனைவரும் பயோலாஜிக்கல் முறையில் பிறந்துள்ளோம். ஆனால் பிரதமர் மோடி மட்டும் பயாலஜிக்கல் முறையில் பிறக்கவில்லை என்கிறார். அம்பானி, அதானிக்கு உதவுதற்காக பிரதமர் மோடியை, பரமாத்மா அனுப்பி உள்ளார்.
ஜுன் 4ம் தேதிக்கு பிறகு பிரதமர் மோடி மற்றும் நரேந்திர மோடிக்கு குட்பை சொல்லலாம். டாட்டா சொல்லலாம். இன்னும் 7 நாட்கள் மட்டுமே பொதுமக்களை ஏமாற்றும் பிரதமர் மோடியின் ஆட்சி இருக்கும். ஏனென்றால் லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு பொதுமக்கள் ஆதரவு தெரிவித்து வாக்களிக்கின்றனர். இது மிகவும் உறுதியாக தெரிகிறது. இந்த லோக்சபா தேர்தல் மூலம் நாடு பாஜகவின் பிடியில் இருந்து விடுதலையாக உள்ளது. நாட்டுக்கான நல்ல நேரம் விரைவில் வருகிறது'' என பேசிக்கொண்டிருந்தார்.
இந்த வேளையில் திடீரென்று ராகுல் காந்தி தனது அருகே இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கொஞ்சம் நீர் பருகினார். அதன்பிறகு திடீரென்று அவர் தண்ணீரை தனது தலையில் ஊற்றி கொண்டார். இதனை பார்த்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். வடமாநிலங்களில் தற்போது கடும் வெயில் மற்றும் வெப்ப அலை வீசி வருகிறது.
இன்று ராகுல் காந்தியின் பொதுக்கூட்டம் நடந்த ருத்ராபூரிலும் கடும் வெப்பஅலை வீசியது. இதனை தாங்க முடியாமல் தான் ராகுல் காந்தி மேடையில் பேசி கொண்டிருந்தபோதே தனது தலையில் தண்ணீரை ஊற்றி தன்னை தானே கூல் செய்து கொண்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications