எழுதி வெச்சுக்குங்க.. ஜூன் 4-ந் தேதி ராகுல் காந்தி சொல்லப் போவது ‘இதுதான்’... கலாய்த்த அமித்ஷா
லக்னோ: லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந் தேதி பிற்பகல், வாக்குப் பதிவு இயந்திரங்களால் இந்தியா கூட்டணி தோற்றுவிட்டது என விளக்கம் தரப் போகிறார் ராகுல் காந்தி என கிண்டலடித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
உ,பி. குஷிநகரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: முதல் 5 கட்ட தேர்தல் தொடர்பான விவரங்கள் எங்களிடம் இருக்கிறது. முதல் 5 கட்டங்களிலேயே பிரதமர் மோடி 310 இடங்களைத் தாண்டி விட்டார். ராகுல் காந்திக்கு 40 சீட் கூட கிடைக்காது. உ.பி.யில் அகிலேஷ் யாதவுக்குக்கு 4 சீட்கூட தேறாது.

வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கும் ஜூன் 4-ந் தேதி பிற்பகல் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்திப்பார். அப்போது, வாக்குப் பதிவு இயந்திரங்களால் இந்தியா கூட்டணி தோற்றுவிட்டதாக பழி போடுவார். காங்கிரஸ் தலைவர் பதவியை மல்லிகார்ஜூன கார்கே இழந்துவிடுவார்.
பிரதமர் மோடி மிகவும் பின்தங்கிய வீடு ஒன்றில் பிறந்தவர். ராகுல், அகிலேஷ் போல செல்வந்தர் கிடையாது; சில்வர் ஸ்பூனுடன் பிறந்தவரும் அல்ல. உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதி மக்கள் எதிர்கொள்ளும் அத்தனை துயரங்களையும் ராகுல் காந்தியாலும் அகிலேஷ் யாதவாலும் உணர்ந்து கொள்ள முடியாது.
இந்த நாட்டின் தட்பவெப்ப நிலையை ராகுல், அகிலேஷ்யாதவால் தாங்க முடியாது. அதனால்தான் 6 மாதங்களுக்கு ஒரு முறை ராகுல் காந்தி தாய்லாந்து செல்கிறார். பூர்வாஞ்சல் பிராந்தியத்தின் வெப்பத்தை ராகுல் காந்தியால் தாங்க முடியாது. பிரதமர் மோடியோ ஒருபோதும் தமது பதவி காலத்தில் ஓய்வு எடுத்ததே இல்லை.
முதல்வராகவும் பதவி வகித்துள்ளார், பிரதமராகவும் இருக்கிறார். ஒரு 25 பைசா அளவுக்கு கூட ஊழல் குற்றச்சாட்டுகளை மோடி மீது சுமத்த முடியாது. ஆனால் ராகுல்- அகிலேஷ் ரூ12 லட்சம் கோடி ஊழல் செய்தவர்கள்.
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையில் மட்டும் மோடி பங்கேற்கவில்லை. அயோத்தி ராமர் கோவில் திறப்பு நிகழ்ச்சியும் மோடி பங்கேற்றார். காசி விஸ்வநாதர் கோவிலைப் புதுப்பித்திருக்கிறார். சோம்நாத் ஆலயத்தில் தங்க தகடு பதிக்கும் பணி நடைபெறுகிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.












Click it and Unblock the Notifications