பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிக்கு... லோக்ஆயுக்தாவில் துணை தலைவர் பதவி
லக்னோ: கடந்த ஆண்டு பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த ஓய்வுபெற்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ்க்கு, உத்தரப் பிரதேச லோக்ஆயுக்தாவில் துணைத் தலைவர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் அமைப்பு லோக்ஆயுக்தா. அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களையும் இந்த லோக்ஆயுக்தா அமைப்புகளால் விசாரிக்க முடியும்.
நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த லோக்ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாநிலத்திலும் லோக்ஆயுக்தா அமைப்புக்கு ஒரு தலைவரும், 3 துணைநிலை தலைவர்களும் இருப்பார்கள். இவர்களால் அதிகபட்சம் எட்டு ஆண்டுகள் வரை இந்த அமைப்புகளில் தலைவர்களாக இருக்க முடியும்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தின் 3ஆவது துணைநிலை லோக்ஆயுக்தா தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவை அம்மாநில ஆளுநர் நியமித்தார். இதையடுத்து அவர் நேற்று துணைநிலை லோக்ஆயுக்தா தலைவராகப் பதவியேற்றார். அவருக்கு லோக்ஆயுக்தா தலைவர் சஞ்சய் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்தியாவில் பல ஆண்டுகளாக நடைபெற்ற வந்த பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்தவர் தான் இந்த நீதிபதி சுரேந்திர குமார் யாதவ். கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி கல்யான் சிங் என 32 பேரையும் பாபர் மசூதி இடிப்பு வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டார்.