உ.பி.யில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை.. உறவினர்களே நதியில் வீசும் அவலம்.. ஷாக் வீடியோ வைரல்
லக்னோ: கங்கை நதியில் கொரோனா சடலங்கள் மிதந்து வந்து சில வாரங்கள் கூட முடியாத நிலையில், உத்தரப் பிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடல் ஆற்றில் வீசப்படும் அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. தினசரி வைரஸ் பாதிப்பு அதிகபட்சமாக நான்கு லட்சம் வரை சென்றது.
அதேபோல உயிரிழப்புகளும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்தது. தினசரி கொரோனா உயிரிழப்புகளே அதிகபட்சமாக 4 ஆயிரத்தைக் கூட கடந்ததது
காத்திருக்கும் சடலங்கள்
குறிப்பாக டெல்லி, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கொரோனா உயிரிழப்புகள் மிக அதிகமாக இருந்தன. பல இடங்களில் உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்கே பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கங்கை நதியில் கொரோனாவால் உயிரிழந்தோரின் சடலங்கள் மிதந்து வந்ததையும் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியாது.
மத்திய அரசு அறிவுறுத்தல்
கங்கை நதியில் சடலங்கள் மிதந்து வரும் வீடியோக்களும் வைரலானது. இதுபோல சடலங்கள் நதியில் தூக்கி வீசப்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வட மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. நதிகளில் சடலங்கள் தூக்கி வீசப்படுவதில்லை என்பதை உறுதி செய்யக் கரையோர பகுதிகளில் ரோந்து பணிகளை அதிகப்படுத்தும்படி மத்திய அரசு வலியுறுத்தியிருந்தது.
வைரல் வீடியோ
இந்நிலையில், உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளி ஒருவரின் சடலம் ஆற்றில் வீசப்பட்டும் அதிர்ச்சியூட்டும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த நிகழ்வு உத்தரப் பிரதேசத்தின் பால்ராம்பூர் மாவட்டத்தில் கடந்த மே 28ஆம் தேதி அரங்கேறியுள்ளது. அதில் பிபிஇ கிட் அணிந்த ஒருவரும். சாதாரண உடையில் ஒருவரும் உயிரிழந்தவரின் உடலை நதியில் தூக்கி வீசுகின்றனர். இந்த வீடியோ தற்போது ட்விட்டர் தளத்தில் வைரலாகியுள்ளது.
சடலத்தை தூக்கி எறியும் உறவினர்கள்
அந்த நபர் கொரோனாவால் உயிரிழந்தார் என்றும் அவரது உறவினர்களே சடலத்தை நதியில் தூக்கி வீசினர் என்றும் பால்ராம்பூர் தலைமை மருத்துவ அதிகாரி தெரிவித்தார். இது குறித்து மேலும் அவர் கூறுகையில், "அந்த நபர் பெயர் பிரேம்நாத். அவர் கடந்த மே 25ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் மே 29இல் உயிரிழந்தார். இதையடுத்து கொரோனா வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்து உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் தான் சடலத்தை நதியில் தூக்கி வீசியுள்ளனர். இது குறித்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார். இந்த வீடியோ வைரலானைத் தொடர்ந்து 2 பேரை உத்தரப் பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் சஞ்சய் குமார், மனோஜ் குமார் என அடையாளாம் காணப்ப்டுள்ளனர்.
ஆம்புலன்ஸ்கள்
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர், இதேபோல வேறு சில வீடியோக்களும் வைரலானது. பீகார்-உத்தரப் பிரதேச எல்லையில் அமைந்துள்ள பாலங்களில், ஆம்புலன்ஸ்கள் வந்து நிற்கின்றன. பின்னர், ஆம்புலன்ஸ்களின் உள்ளே இருந்து கொரோனா சடலங்களை எடுத்து, நதியில் வீசுவதைப் போல அந்த வீடியோ அமைந்திருந்தது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பீகார்- உத்தரப் பிரதேசம் என 2 மாநிலங்களும் ஒருவரை ஒருவர் குற்றஞ்சாட்டி வருகின்றன.