நாம் பெரும் சக்தி! இந்தியா, பாகிஸ்தானை ஒன்றாக ஒப்பிட்ட காலம் முடிந்துவிட்டது.. அமைச்சர் ஜெய்சங்கர்
லக்னோ: இந்தியாவையும், பாகிஸ்தானையும் இந்த உலகம் ஒன்றாக பார்த்த காலம் மலையேறிவிட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
ஆசிய பிராந்தியத்தில் இன்று தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கும் இந்தியாவை, வல்லரசு நாடுகளுடன் உலகம் ஒப்பிட்டு பேசி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா அடைந்திருக்கும் அசுர வளர்ச்சி உலகுக்கே ஆச்சரியம் அளிப்பதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.
மேற்குலக நாடுகள் புறக்கணித்தன.. ரஷ்யாதான் உதவியது! ஓப்பனாக பேசிய ஜெய்சங்கர்! கவனிக்கும் உலக நாடுகள்
வல்லரசு நாடுகளுக்கு இணையான வளர்ச்சி
உத்தரபிரதேச மாநிலம் காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த காசி தமிழ் சங்கமம் கண்காட்சியை ஜெய்சங்கர் பார்வையிட்டார். அப்போது அங்கிருந்த மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: 1947-இல் சுதந்திரம் அடைந்த போது இருந்த இந்தியாவுக்கும், இப்போது இருக்கும் இந்தியாவுக்கும் இடையேயான வித்தியாசம் மலைப்பை ஏற்படுத்துகிறது. உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக கருதப்பட்ட இந்தியா, 70 நாடுகளில் வல்லரசு நாடுகளுக்கு இணையாக வளர்ந்திருப்பதை அசுர வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்தியாவும், பாகிஸ்தானும்
நான் உங்கள் (மாணவர்கள்) வயதில் இருக்கும் போது, இந்தியாவையும், பாகிஸ்தானையும் இந்த உலகம் ஒரே தட்டில் வைத்து பார்த்தது. பொருளாதார ரீதியாகவும் சரி.. பாதுகாப்புத் துறையிலும் சரி.. இரண்டு நாடுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருந்தன. ஆனால், இன்று நாம் இருக்கும் நிலைமையே வேறு. ஆசிய கண்டத்திலேயே தவிர்க்க முடியாத பொருளாதார சக்தியாக இந்தியா உருவெடுத்துள்ளது. பாகிஸ்தானும் இந்தியாவையும் ஒப்பிட்ட உலக நாடுகள், இன்றைக்கு இந்தியாவையும் வல்லரசு நாடுகளையும் ஒப்பிட்டு பேசி வருகின்றன.
ஐடி துறையில் முதுகெலும்பு
உலக அளவில் 5-வது பொருளாதார சக்தியாக இந்தியா உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் உலகிலேயே இந்தியாதான் கோலோச்சி வருகிறது. 10-15 ஆண்டுகளுக்கு முன்பு கூட, தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா உலகின் பின்வாசலில் இருந்தது. ஆனால் இன்று இந்தியர்கள் தகவல் தொழில்நுட்பத் துறையில் முதுகெலும்பாக பார்க்கப்படுகிறார்கள். இந்தியர்களின் திறமையை உலகம் கண்டறிந்து அங்கீகரித்து வருகிறது.
மோடி ஆட்சியில் அசுர வளர்ச்சி
இந்தியாவின் வளர்ச்சிக்கு வெளிநாட்டு இந்தியர்கள் வழங்கும் பங்களிப்பு சாதாரணமானது அல்ல. இந்தியா இத்தகைய வளர்ச்சி அடைந்ததற்கு வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. அந்த பங்களிப்பை அவர்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் கடந்த 8 ஆண்டுகளில், இந்தியா மீதான உலக மக்களின் பார்வை மாறியுள்ளது. இந்த 8 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சி பெற்றிருப்பதை உலக நாடுகள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றன. இவ்வாறு ஜெய்சங்கர் பேசினார்.