'குடுமிப்பிடி சண்டை'.. சுற்றி நின்ற மாணவிகள்.. மாறி மாறி அடித்துக் கொண்ட ஆசிரியைகள் - பரபர வீடியோ
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பள்ளி மாணவிகள் முன்பு அற்ப காரணத்துக்காக இரண்டு ஆசிரியைகள் குடுமிப்பிடி சண்டை போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களுக்கு இடையே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதை தீர்த்து வைக்க வேண்டிய ஆசிரியைகளே, இப்படி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்ட சம்பவம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
அஹிம்சையை போதித்த மகாத்மா காந்தியின் பிறந்தநாள் நிகழ்ச்சயில், ஆசிரியைகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த தகராறு குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உ.பியில் தொடரும் ஜாதி கொடூரம்.. இரும்பு ராடால் தாக்கிய ஆசிரியை.. பரிதாபமாக பலியான தலித் மாணவன்
எப்படி இருந்த ஆசிரியர்கள்..
பள்ளிக்கூடம் என்பது 'குழந்தைகளின் இரண்டாவது வீடு' என்று சொல்லப்படுவது உண்டு. மாணவர்களுக்கு கல்வியை மட்டுமல்லாமல் ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்கும் இடமாக ஒருகாலத்தில் பள்ளிக்கூடங்கள் இருந்தன. ஒரு மாணவனை பெரிய பதவிக்கு கொண்டு செல்வது மட்டும் ஆசிரியர்களின் பணி அல்ல. மாறாக, அவனை சமூகத்தில் சிறந்த மனிதனாக உருவாக்குவதே நல்ல ஆசிரியர்களின் கடமை ஆகும். ஒருகாலத்தில், பள்ளிக்கூடங்களும், ஆசிரியர்களும் அப்படிதான் இருந்தனர். தவறு செய்யும் பிள்ளைகளையும், ஒழுக்கக்கேடாக திரியும் மாணவர்களையும் கண்டித்தும், தண்டித்தும் ஆசிரியர்கள் திருத்தினார்கள்.
இன்றைய ஆசிரியர்களின் லட்சணம்
ஆனால், இன்றைக்கு பள்ளிகள் செயல்படும் விதத்தையும், ஆசிரியர்களின் நடவடிக்கைகளையும் பார்க்கும் போது அந்தக் காலம் எல்லாம் மலையேறி போய்விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. மாணவர்களை பணம் சம்பாதிக்கும் ஒரு இயந்திரமாக உருவாக்குவதே இன்று பல தனியார் பள்ளிகளின் குறிக்கோளாக இருக்கிறது. சில பெற்றோர்களும் அதைதான் விரும்புகின்றனர். படிப்பை தாண்டி அவர்களுக்கு வேறு எதுவும் சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை. ஒழுக்கம், சமூகத்தில் பிறரிடம் எப்படி பழக வேண்டும்; பெரியவர்களுக்கு எப்படி மதிப்பளிக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்களை இன்றைய ஆசிரியர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை. அவ்வளவு ஏன்.., சில ஆசிரியர்களே இன்று ஒழுக்கக்கேடாக நடந்துகொள்வதை பார்க்க முடிகிறது. சிகரெட் புகைத்துக்கொண்டே பாடம் நடத்தும் ஆசிரியர், மது அருந்திவிட்டு பள்ளிக்கு வரும் ஆசிரியை என்பன போன்ற செய்திகள் ஈட்டியாக நெஞ்சில் பாய்கின்றன. இவர்களை பார்த்து மாணவர்கள் என்ன கற்க போகிறார்கள் என்ற கேள்வியும் நம் மனதில் எழுகிறது.
காந்தி ஜெயந்தி நிகழ்ச்சி
இதுபோல் ஆசிரியைகள் ஒழுக்கக்கேடாக நடந்து கொண்ட ஒரு சம்பவத்தைதான் இப்போது பார்க்க போகிறோம். உத்தரபிரதேச மாநிலம் ஹமிர்பூர் மாவட்டத்தில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. சுமார் 500 மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளியில் 25-க்கும் மேற்பட்ட ஆசிரியைகள் உள்ளனர. இந்நிலையில், கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தன்று பள்ளியில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. விடுமுறை தினம் என்ற போதிலும், கலை நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெறும் என்பதால் மாணவிகள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டனர்.
ஆசிரியைகள் குடுமிப்பிடி சண்டை
அப்போது, கலை நிகழ்ச்சிக்கு யார் தலைமை வகிப்பது என்பதில் அங்கு 2 ஆசிரியைகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாய்த் தகராறாக மாறியது. பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில், இரண்டு ஆசிரியைகளும் ஒருவரையொருவர் முடியை பிடித்து இழுத்து குடுமிப்பிடி சண்டை போட்டனர். மற்ற ஆசிரியைகள் அவர்களை விலக்கி விட முயன்றனர். ஆனால் இரண்டு ஆசிரியைகளும் விடாமல் ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டன்ர. பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியைகளே இப்படி சண்டை போடுவதை பார்த்து மாணவிகள் திகைத்து நின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சண்டை போட்ட ஆசிரியைகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரபிரதேச கல்வித்துறை தெரிவித்துள்ளது.