அகிலேஷ் கட்சியில் ஹவுஸ்புல் ... அய்யா வாங்க.. அம்மா வாங்க..கட்சிகள், தலைவர்களிடம் கெஞ்சும் காங்.
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைக்க மறுத்த பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்துக்கு காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
உ.பி. தேர்தல் களத்தில் பாஜக சிறிய ஜாதி கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி, ராஜ்பாரின் கட்சி, ஜெயந்த் சவுத்ரியின் ஆர்.எல்.டி. ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. பகுஜன் சமாஜ், காங்கிரஸ், ஜேடியூ தனித்தே போட்டியிடுகின்றன.

பீம் ஆர்மி ஆசாத்
இந்த நிலையில் லக்னோவில் அகிலேஷ் யாதவை அண்மையில் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் சந்தித்து பேசினார். இதனையடுத்து தலித்துகள் தலைவரான சந்திரசேகர் ஆசாத், அகிலேஷுடன் கூட்டணி அமைப்பார் என கூறப்பட்டது. ஆனால் இந்த எதிர்பார்ப்பு புஸ்வானமாகிப் போனது. அகிலேஷுடன் கூட்டணி அமைக்க மறுத்துவிட்டார் சந்திரசேகர் ஆசாத்.

காங். பரிதாபம்
இதனைத் தொடர்ந்து தற்போது காங்கிரஸ் ஆள் பிடிக்கும் வேலைகளில் இறங்கி உள்ளது. காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்திதான் உ.பி.யில் அக்கட்சியின் பிரசார பீரங்கியாக சுழன்று வருகிறார். ஆனால் தேர்தல் கருத்து கணிப்புகள் எதுவுமே காங்கிரஸுக்கு துளி சாதகமாகவும் இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக சிங்கிள் டிஜிட் இடங்கள்தான் கிடைக்கும் என்பதை திட்டவட்டமாகவே கருத்து கணிப்புகள் கூறி வருகின்றன.

அய்யா வாங்க.. அம்மா வாங்க..
இந்த பின்னணியில் உ.பி. காங்கிரஸ் தலைவர் இர்ஷாத் உல்லா சமூக வலைதளங்களில் ஒரு போஸ்ட் பதிவிட்டுள்ளார். அதில், சமாஜ்வாதி கட்சி ஹவுஸ்புல் ஆகிவிட்டது. சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷுடன் செல்லாதவர்கள், தேர்தலில் டிக்கெட் கிடைக்காதவர்கள் காங்கிரஸுக்கு வரலாம். என்னுடைய வீடு எப்போதும் உங்களுக்காக திறந்தே இருக்கும் என கூறியுள்ளார்.

பிரியங்கா களத்தில் இருந்தும்
உத்தரப்பிரதேசத்தில் ஒரு காலகத்தில் காங்கிரஸ் கட்சி அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. ஆனால் காலங்கள் உருண்டோட நேரு குடும்ப தொகுதிகளில் கூட செல்வாக்கை தொலைத்துவிட்டது காங்கிரஸ். கடந்த தேர்தலில் வெறும் 7 இடங்களில்தான் காங்கிரஸ் வென்றது. இதனை சரிகட்டத்தான் பிரியங்கா காந்தி களமிறங்கினார். ஆனாலும் பிரியங்கா வந்தாலும் காங்கிரஸ் தேறாத நிலையில்தான் காங். தலைவர்கள் இப்படியான கெஞ்சுதல் அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அந்தோ பரிதாபம்!












Click it and Unblock the Notifications