நாளை உ.பி. தேர்தல்: இன்று வெளியான காங். தேர்தல் அறிக்கை! 10 நாளில் விவசாய கடன் தள்ளுபடி என உறுதி
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் நாளை முதற்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறது காங்கிரஸ்.
உத்தரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளுக்குமான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதில் முதல் கட்டத் தேர்தல் நாளை காலை நடைபெறுகிறது. இதையடுத்து நேற்று மாலையுடன் அந்தத் தொகுதிகளில் பிரசாரம் நிறைவடைந்தது.
2 ஹெலிகாப்டர் வந்தும் பயனில்லை! கேரள மலையில் சிக்கியிருந்த இளைஞர் மீட்கப்பட்டது எப்படி? பரபர வீடியோ
உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜவும் எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியும் ஏற்கெனவே தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.
காங்கிரஸ்
உத்தரப்பிரதேசத்தில் ஆழமாக காலூன்றி இருந்த காங்கிரஸ் கட்சி, கடந்த பத்து ஆண்டுகளாக அங்கு தடுமாறி வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 403 தொகுதிகளில் ஒற்றை இலக்க வெற்றியைக் கூட பெறமுடியவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் முகமான ராகுல் காந்தி தோல்வியை சந்தித்தார். இந்நிலையில் மீண்டும் தங்கள் கட்சியை உத்தரப்பிரதேசத்தில் கட்டமைத்து வருகிறது காங்கிரஸ்.
தேர்தல் அறிக்கை
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை முன்னிறுத்தியே இந்த தேர்தலை சந்தித்து வருகிறது. வீடு வீடாக சென்று தன்னுடைய பிரசாரத்தை தேர்தல் தேதிகள் அறிவிப்பதற்கு முன்பே தொடங்கிவிட்டார். இப்போது காங்கிரஸ் கட்சி கடந்த தேர்தலைவிடவும் கணிசமான வெற்றிகளைப் பெறும் என்றும் நம்பிக்கைத் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் நாளை முதற்கட்டத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இன்று தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
வாக்குறுதிகள்
காங்கிரஸ் கட்சி பல முக்கிய திட்டங்களைத் தங்கள் வாக்குறுதிகளாகக் கொடுத்திருக்கிறது. ''உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும். மின்சாரக் கட்டணம் தள்ளுபடி செய்யப்படும், கொரோனா பாதித்த குடும்பங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மாநிலத்தில் 20 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும். மருத்துவ செலுவுகளுக்காக ரூ.10 லட்சம் வரை அரசு உதவி வழங்கப்படும்.
இலவச கல்வி
பசுஞ்சாணம் ஒரு கிலோ இரண்டு ரூபாய்க்கு வாங்கப்படும், இது மண்புழு உரம் தயாரிப்பில் பயன்படுத்தப்படும். பள்ளிக் கட்டணம் கட்டுப்படுத்தப்படும், காலியாக உள்ள சுமார் 2 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆரம்பக்கல்வி முதல் முதுநிலை வரை இலவசக் கல்வி வழங்கப்படும். கோதுமை ஒரு குவிண்டால் 4500 ரூபாய்க்கும், கரும்பு ஒரு குவிண்டால் 400 ரூபாய்க்கும் வாங்கப்படும்'' என்று வாக்குறுதிகளாக தெரிவித்துள்ளனர்.
பிரியங்கா காந்தி
தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரியங்கா காந்தி பேசுகையில், ''நாங்கள் ஏற்கெனவே பெண்களுக்காகவும் இளைஞர்களுக்காகவும் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளோம். தற்போது உத்தரப்பிரதேசத்திற்கான பொது வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளோம். இதற்காக மாநிலம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்களை சந்தித்து பேசினோம். அவர்களுக்கு எது தேவையோ அதை வாக்குறுதிகளாகக் கொடுத்துள்ளோம்.
வியாபாரிகள்
கடந்த சில தினங்களுக்குமுன் கடன் தொல்லை தாங்க முடியாமல், சிறு வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலைதான் மாநிலம் முழுவதும் இருக்கிறது. பிரதமருக்கு சிறு தொழில் செய்பவர்கள் குறித்து எந்தவித கவலையும் இல்லை. பெரிய தொழிலதிபர்களுக்காக பெரிய பட்ஜெட் தான் பிரதமரின் குறிக்கோள் சிறு குறு வியாபாரிகள் எல்லம் அவருக்கு தெரியாது. இது எல்லோருக்குமான வாக்குறுதி. காங்கிரஸ் இதை நிச்சயம் நிறைவேற்றும்'' என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.