ட்ரெய்னிங்கில் என்ன சொல்லி தந்தாங்க? துப்பாக்கியை பயன்படுத்த முடியாமல் திணறிய எஸ்.ஐ.. ஷாக்கான ஐ.ஜி
லக்னோ: உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் ஐ.ஜி. நடத்திய ஆய்வின் போது, துப்பாக்கிக்குள் தோட்டாக்களை போட முடியாமல் திணறிய சப் இன்ஸ்பெக்டர், துப்பாக்கிகளை எப்படி இயக்குவது என தெரியாமல் திருதிருவென முழித்த போலீஸாரை கண்டு அவர் அதிர்ச்சியில் உறைந்தார்.
இந்த அடிப்படை விஷயங்கள் கூட தெரியாமல் என்ன போலீஸ் பயிற்சி முடித்தீர்கள் என அவர்களை கடிந்துகொண்ட ஐஜி, இதுதொடர்பாக உங்கள் உயரதிகாரிகளிடம் பேசிக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
மேலும், இந்த அடிப்படை பயிற்சிகளை முதலில் முடித்துவிட்டு, பின்னர் அன்றாடப் பணிகளில் இணையுங்கள் எனவும் ஐஜி கோபத்துடன் தெரிவித்துவிட்டு சென்றார்.
உத்தரபிரதேசத்தில் பாஜகவின் வெற்றிக்கு யார் காரணம்? - யோகியா அல்லது மோதியா?
உலகிலேயே சிறந்த போலீஸ் படையா?
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டிலேயே அதிக அளவில் குற்றச் சம்பவங்கள் நிகழும் மாநிலமாக இருப்பது உத்தரபிரதேசம்தான். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் முதல் கொலைக் குற்றங்கள் வரை தினமும் குறைந்தபட்சம் 10 சம்பவங்களாவது உபியில் அரங்கேறி வருகின்றன. இதனிடையே, மாநிலத்தில் குற்றச் சம்பவங்களை தடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் போலீஸாருக்கு அதிக அதிகாரங்களை வழங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகின. எனினும், அங்கு குற்றங்கள் குறைந்தபாடில்லை. இது ஒருபுறம் இருக்க, பாஜக தலைவர்கள் பலர் உலகிலேயே சிறந்த போலீஸ் படை உத்தரபிரதேசத்தில்தான் உள்ளது என பேசி வருகிறார்கள். அதேபோல, முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உலகிலேயே சட்டம் ஒழுங்கு சீராக இருக்கும் மாநிலம் உத்தரபிரதேசம் என அண்மையில் பேசியிருந்தார்.
ஐஜி திடீர் ஆய்வு
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் சந்த் கபீர் மாவட்டம் கலிலாபாத் காவல் நிலையத்தில் ஐ.ஜி. ஆர்.கே. பரத்வாத் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். எந்த அறிவிப்பும் இல்லாமல் ஐஜி வந்ததை பார்த்த அங்கிருந்த போலீஸார் அதிர்ந்து போயினர். அப்போது, அங்கிருந்த சப் இன்ஸ்பெக்டரை அழைத்து, அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.
தோட்டா போட தெரியாத எஸ்ஐ
பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை.. அந்த சப் இன்ஸ்பெக்டரிடம் காவல் நிலையத்தில் உள்ள ரைஃபிள் துப்பாக்கியை இயக்கி காட்டுமாறு ஐஜி பரத்வாஜ் கூறினார். இதையடுத்து, ரைஃபிள் துப்பாக்கியை எடுத்து வந்த சப் இன்ஸ்பெக்டர், அதற்குள் தோட்டாவை போடுவதற்கே படாத பாடு பட்டுக்கொண்டிருந்தார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஐ.ஜி., அவரிடமிருந்து துப்பாக்கியை வாங்கி அதில் தோட்டாவை போட்டு காண்பித்தார். ஆனாலும், அதன் பிறகு சப் இன்ஸ்பெக்டருக்கு தோட்டாவை துப்பாக்கிக்குள் செலுத்த முடியவில்லை. அதேபோல, அங்குள்ள காவலர்கள் பலருக்கு துப்பாக்கியை எடுத்து சுட கூட தெரியவில்லை. இதை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ஐஜி, "இந்த அடிப்படை விஷயங்கள் கூட தெரியாமல் என்ன போலீஸ் பயிற்சி செய்தீர்கள்?" என கேள்வியெழுப்பினார். மேலும், இதுபோன்ற அடிப்படை பயிற்சிகளை உடனே முடியுங்கள் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
"வெட்கக்கேடு" - அகிலேஷ் விளாசல்
இந்நிலையில், சப் இன்ஸ்பெக்டருக்கு துப்பாக்கிக்குள் தோட்டாவை போட தெரியாத வீடியோவை சமூக வலைதளத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிவிட்டார். அதற்கு கீழே, "யோகிஜியின் போலீஸ் படைக்கு துப்பாக்கிக்குள் தோட்டாவை கூட போட தெரியவில்லை. இதை விட வெட்கக்கேடான விஷயம் எதுவும் இருக்கிறதா? துப்பாக்கியை எப்படி பயன்படுத்த தெரியாத இந்த போலீஸார்தான், ஏழைகளையும், அப்பாவி மக்களையும் துன்புறுத்தி வருகிறார்கள்" என அகிலேஷ் எழுதியுள்ளார்.