அடுத்தாண்டு தேர்தல் நடைபெறும் உபி-இல்.. 5 சர்வதேச விமான நிலையங்கள்.. மக்களை குஷிப்படுத்தும் அரசு
லக்னோ: நொய்டா விமான நிலையத்திற்குப் பிரதமர் மோடி வரும் நவ,25ஆம் தேதி அடிக்கல் நாட்டவுள்ள நிலையில், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் 5 சர்வதேச விமான நிலையங்களைக் கொண்டிருக்கும் மாநிலமாக உபி உருவெடுத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் நடவடிக்கைகளைத் தீவிரமாகத் தொடங்கிவிட்டன.
குறிப்பாக தற்போது ஆளும்கட்சியாக உள்ள பாஜக மீண்டும் தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக முனைப்புக் காட்டி வருகிறது.

பிரமதர் மோடி
இதற்காக உத்தரப் பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன. அங்குள்ள நொய்டா பகுதியில் புதிய சர்வதேச விமான நிலையத்தை அமைக்கப் பிரதமர் மோடி வரும் நவ, 25ஆம் தேதி அடிக்கல் நாட்டவுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் ஏற்கனவே, 8 விமான நிலையங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுதவிர மேலும் 13 விமான நிலையங்கள், 7 விமான ஓடுபாதைகள் கட்டுமானத்தில் உள்ளன.

எந்த மாநிலங்களிலும் இல்லை
இது தொடர்பாக உத்தரப் பிரதேச பாஜக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் அடிக்கல் நாட்டு விழா நவம்பர் 25 ஆம் தேதி நடைபெறும். கட்டுமானத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் முடிந்தால் உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் ஐந்து சர்வதேச விமான நிலையங்கள் இருக்கும். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்தளவுக்குச் சர்வதேச விமான நிலையங்கள் இல்லை.

சர்வதேச விமான நிலையங்கள்
உத்தரப் பிரதேசத்தில் 2012 வரை லக்னோ மற்றும் வாரணாசி ஆகிய இரண்டு சர்வதேச விமான நிலையங்கள் மட்டுமே இருந்தன. குஷிநகரில் மூன்றாவது சர்வதேச விமான நிலையத்தைக் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதுபோக அயோத்தி சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமான பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த ஏர்போர்ட்டில் விமானச் சேவைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எங்கு அமைகிறது
ஐந்தாவது சர்வதேச விமான நிலையம் தேசிய தலைநகர் பகுதியான என்சிஆரின் நொய்டா அருகே அமையவுள்ளது. நாட்டில் வேறு எந்த மாநிலத்துடனும் ஒப்பிடமுடியாத வகையில் சிறப்பான ஒரு விமானச் சேவை உத்தரப் பிரதேசத்தில் வழங்கப்படுகிறது. சாலை, ரயில், விமானம் என அனைத்து முறைகளிலும் சிறப்பான போக்குவரத்து முறை இருப்பதை உறுதி செய்வதே உபி அரசின் முக்கிய நோக்கமாகும். பிரதம மந்திரியின் கதி சக்தி தேசிய மாஸ்டர் பிளான் திட்டத்தின் கீழ் முன்னுரிமை அளித்து இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

நொய்டா சர்வதேச விமான நிலையம்
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டவுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையம் உத்தர பிரதேசத்தில் என்சிஆர் பகுதியிலுள்ள கெளதம் புத்த நகரின் ஜெவார் நகருக்கு அருகில் அமையவுள்ளது. டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து 72 கிலோமீட்டர் தொலைவிலும், நொய்டாவிலிருந்து 40 கிமீ தொலைவிலும் இந்த விமான நிலையம் அமையவுள்ளது. யமுனா விரைவுச்சாலை (கிரேட்டர் நொய்டா முதல் ஆக்ரா வரை), கிழக்குப் புற விரைவுச்சாலை அருகில் இருப்பதால், இந்த விமான நிலையம் மிகச் சிறந்த இணைப்பைக் கொண்டிருக்கும். மேலும், முன்மொழியப்பட்டுள்ள டெல்லி- வாரணாசி மெட்ரோ வழித்தடத் தடமும் இதில் இணைக்கப்படும். ஆண்டுக்கு 1.2 கோடி பேரை கையாளும் வகையில் கட்டப்பட்டு வரும் இந்த விமான நிலையத்தை 36 மாதத்தில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications