இந்த மனசு தான் சார் கடவுள்.. ஏழைகளுக்கு உதவ ரூ.600 கோடி சொத்தை தானம் செய்த உத்தர பிரதேச டாக்டர்!
லக்னோ: ஏழைக்கு உதவி செய்யக்கோரி உத்தர பிரதேச மாநில அரசுக்கு டாக்டர் ஒருவர் ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை தானமாக கொடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் மொராடாபாத்தை சேரந்தவர் அரவிந்த் கோயல். டாக்டர். இவரது மனைவி பெயர் ரேணு கோயல். இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
அரவிந்த் கோயல் கடந்த 50 ஆண்டுகளாக டாக்டராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறுவயது முதலே இருந்து வந்துள்ளது.
மத்திய பிரதேச மேயர் தேர்தல்.. அதிர்ச்சியில் பாஜக! பழைய பன்னீர்செல்வமாக வந்த காங்கிரஸ்
கொரோனா கால உதவி
இதனால் அவ்வப்போது ஏழை மக்களுக்கு அவர் உதவி செய்து வந்தார். குறிப்பாக கொரோனா கால ஊரங்கில் 50 கிராமங்களை தத்தெடுத்து மக்களுக்கு இலவசமாக உணவுகள் வழங்கினார். மேலும் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய அவர் உதவினார். மேலும் தான் டாக்டர் என்பதால் ஏழைகளுக்கு சிகிச்சைக்கும், கல்விக்கும் உதவிக்கரம் நீட்டினார்.
ரூ.600 கோடி சொத்து தானம்
இந்நிலையில் தான் மூக்கின் மேல் விரல் வைக்கும் வகையில் அரவிந்த் கோயல் பெருந்தன்மையாக தனது ரூ.600 கோடி மதிப்பிலான சொத்துகளை உத்தர பிரதேச மாநில அரசுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளார். ஏழைகளுக்கு உதவும் நோக்கத்தில் அவர் தனது முழு சொத்துகளையும் மாநில அரசுக்கு தானமாக வழங்கி உள்ளார்.
25 ஆண்டுக்கு முன்பே முடிவு
இதுபற்றி அரவிந்த் கோயல் கூறுகையில், ‛‛எனது சொத்துகளை ஏழைகளுக்கு உதவி செய்யும் நோக்கில் வழங்க வேண்டும் என எனக்கு தொடர்ந்து தோன்றி வந்தது. இதனால் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பே எனது சொத்தை தானமாக வழங்க முடிவு செய்தேன். அதன்படி தற்போது மாநில அரசிடம் சொத்துகளை வழங்கி உள்ளேன்'' என்றார்.
ஜனாதிபதி பாராட்டு
தற்போது சொத்துகளை அரசுக்கு எழுதி வைத்துள்ள அரவிந்த் கோயலின் செயலை ஜனாதிபதிகள் பாராட்டி உள்ளனர். தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முன்னாள் ஜனாதிபதிகள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல், ஏபிஜே அப்துல் கலாம் ஆகியோரால் கவுரவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே சொத்துகளின் தற்போதைய மதிப்பை கண்டறிய 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.