தலையை வெட்டுவோம்.. மோடி-யோகியால் கூட காப்பாற்ற முடியாது! இந்து அமைப்பு டாக்டருக்கு பகீர் மிரட்டல்
லக்னோ: இந்து அமைப்புகளில் செயல்பட்டு வரும் டாக்டருக்கு வாட்ஸ்அப்பில் போன் செய்த மர்மநபர், ‛‛இந்து அமைப்பில் சேர்ந்து செயல்படக்கூடாது. இல்லாவிட்டால் தலையை வெட்டுவோம். இதனை மோடி, யோகி ஆதித்யநாத்தால் கூட காப்பாற்ற முடியாது'' என மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வருபவர் அரவிந்த். இவர் சிகானி கேட் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார்.
மேலும் இவர் இந்து அமைப்புகளில் இணைந்து செயல்பட்டு வருகிறார். அதோடு இந்து அமைப்புகள் சார்ந்த நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.
ஞானவாபி மசூதி வழக்கு: இந்து பெண்கள் மனு விசாரணைக்கு ஏற்பு - முஸ்லிம் தரப்பு கூறுவது என்ன?
வாட்ஸ்அப்பில் வந்த போன்
இந்நிலையில் செப்டம்பர் 1ம் தேதி அவருக்கு வாட்ஸ்அப்பில் அமெரிக்க எண்ணில் இருந்து 2 முறை மிஸ்டு கால் வந்தது. இதையடுத்து அவர் அதனை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் போன் செல்லவில்லை. இதையடுத்த ஏதேனும் மோசடிக்காரர்களாக இருக்கலாம் என நினைத்த அவர் மீண்டும் அதனை திரும்ப தொடர்பு கொள்ளவில்லை. இதன் தொடர்ச்சியாக கடந்த 7 ம் தேதி மீண்டும் அவருக்கு ஒரு கால் வந்தது.
கொலை மிரட்டல்
அப்போது டாக்டர் அரவிந்துக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. ‛‛இந்து அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது. அவர்களுடன் சேர்ந்து செயல்படக்கூடாது. இதை மீறினால் தலை துண்டிக்கப்படும்'' என அந்த நபர் பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அதோடு, ‛‛ பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தால் கூட உன்னை பாதுகாக்க முடியாது'' என அந்த நபர் தெரிவித்துள்ளார்.
போலீசில் புகார்
இதனால் பயந்துபோன அரவிந்த் உடனடியாக சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதுபற்றி சர்கிள் போலீஸ் அதிகாரி அலோக் துபே கூறுகையில், ‛‛டாக்டர் அரவிந்த் சிகானி கேட் போலீஸ் எல்லைக்குட்பட்ட லோகியோ நகரில் 20 ஆண்டுகளாக கிளினிக் வைத்துள்ளார். இவருக்கு அமெரிக்காவில் உள்ள எண்ணில்இருந்து மிரட்டல் வந்துள்ளதாக புகார் அளித்துள்ளார். அதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.
தனிப்படை அமைப்பு
இதுபற்றி காசியாபாத் எஸ்எஸ்பி முனிராஜூ கூறுகையில், ‛‛புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் எண் அடிப்படையில் விசாரணை துவங்கப்பட்டுள்ளது. இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது'' என்றார்.