உத்தரப்பிரதேசத்தில் கொத்து கொத்தாக பரவும் கொரோனா.. ஆக்சிஜன் தேடி அரசமரத்தை நாடும் நோயாளிகள்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 30,983 பாதிக்கப்பட்டுள்ளனர். 290 பேர் உயிரிழந்துள்ளனர்.
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் கொரோனாவால் 30,983 பாதிக்கப்பட்டுள்ளனர். 36,650 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 290 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் 2,95,752 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,13,361 பேராக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,162 பேராக அதிகரித்துள்ளது. மாநிலம் முழுவதும் கொரோனாவில் இருந்து 10,04,447 பேர் மீண்டுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். ஆக்சிஜன் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் கொரோனா நோயாளிகளும் மருத்துவர்கள், மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இழந்து அரசமரத்தை நம்பத் தொடங்கியுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் பகதூர்கஞ்ச் பகுதியில் கொரோனா பாசிட்டிவ் என்றால் நேராக அரசமரத்துக்கு வந்து விடுகின்றனர். 2 குடும்பத்தின் ஆறுபேருக்கு கொரோனா பாசிட்டிவ். இவர்கள் அனைவரும் ஆக்சிஜனுக்காக அரச மரத்தினடியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஊர்மிளா என்ற பெண் செய்தியாளர்களிடம் பேசும் போது, "எனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. மருத்துவமனையும் இல்லை, ஆக்சிஜனும் இல்லை. அரச மரத்தின் கீழ் இருந்தால் ஆக்சிஜன் கிடைக்கும் என்று சிலர் சொன்னார்கள். என் குடும்பம் என்னை இங்கே கொண் வந்து விட்டனர். இப்போது நான் கொஞ்சம் நன்றாக உணர்கிறேன் மூச்சு விடுதல் இயல்பாக உள்ளது என்று கூறினார்.
பாஜக எம்.எல்.ஏ. ரோஷன்லால் வர்மா அந்த இடத்துக்கு வந்து மக்களைச் சந்தித்தார். அரசமரத்தடியில் இருப்பவர்களை உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறினார். ஆனால் ஊர்மிளா மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார். அரசமரத்தடியே நிம்மதியாக உள்ளது எனக்கு மூச்சுத் திணறல் இப்போது இல்லை மருத்துவமனை வேண்டாம் என்று மறுத்து விட்டேன் என்கிறார்.

அரச மரம் அதிக ஆக்சிஜன் கொடுக்கிறது. அதனால் இங்கு கொண்டு வந்தோம் அவருக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது, இப்போது ஆக்சிஜன் ஆதரவு தேவையில்லை. யார் என்ன வேண்டுமானாலும் சொல்லி விட்டுப் போகட்டும், என்கிறார் ஊர்மிளாவின் உறவினர்.
ஆனால் மருத்துவ நிபுணர்களோ, அரச மர நம்பிக்கை உளவியல் ரீதியானதே தவிர அறிவியல் உண்மை அல்ல என்கின்றனர். அதாவது புத்துணர்வான காற்றை சுவாசிக்கும் போது அவர்களுக்கு சுவாசம் சீராக இருப்பதாக தோன்றுகிறது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications