சுதந்திர போராட்டத்திற்கு இணையானாது.. 100 மாதங்கள் கடந்தாலும் போராட்டம் தொடரும்.. முழங்கிய பிரியங்கா
லக்னோ: விவசாயிகளின் போராட்டத்தை பிரிட்டிசாருக்கு எதிரான சுதந்திரப் போராட்டத்துடன் ஒப்பிட்டுப் பேசிய பிரியங்கா காந்தி, 100 மாதங்கள் ஆனாலும் விவசாய சட்டங்களை ரத்து செய்யப்படும் வரை போராட்டம் தொடர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டம் 100 நாட்களைக் கடந்துள்ளது. விவசாயிகளுக்கு மக்கள் ஆதரவைத் திரட்டும் நோக்கில் நாடு முழுவதும் கிசான் மகாபஞ்சாயத்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
புதுவையில் பாஜகவை கழற்றிவிட்டு... தனியாக களமிறங்கும் ரங்கசாமி... காரணம் என்ன?
உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் நடைபெற்ற கிசான் மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரியங்கா காந்தி, 100 நாட்கள் இல்லை 100 மாதங்கள் ஆனாலும், மனம் தளராமல் போராடி மத்திய அரசை இந்தச் சட்டங்களை நம் திரும்பப் பெற வைக்க வேண்டும் என்றார்.
சுதந்திரப் போராட்டம்
விவசாயிகள் மத்தியில் பேசிய பிரியங்கா காந்தி, "பிரிட்டிசாருக்கு எதிரான முதல் சுதந்திரப் போராட்டம் இங்கு தான் தொடங்கப்பட்டது. அப்போது பிரிட்டிஷ் அரசு விவசாயிகளை ஏமாற்றிக் கொள்ளையடித்தது, அதை எதிர்த்து மிகவும் துணிச்சலுடன் விவசாயிகள் போராடினார்கள். இந்த முறை பாஜக அரசு விவசாயிகளைச் சுரண்டுகிறது. இதை எதிர்த்தும் தற்போது விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்" என்றார்.
பெரு நிறுவனங்களுக்கு அதிகாரம்
தொடர்ந்து மூன்று விவசாய சட்டங்களையும் விளக்கிப் பேசிய அவர், "முதல் சட்டம் பெரு நிறுவனங்களுக்கு அனைத்து அதிகாரங்களையும் கொடுக்கிறது. அவர்களே அனைத்தையும் முடிவு செய்ய முடியும். அடுத்த சட்டம் அவர்களை தனியாக மண்டிகளை திறக்க அனுமதி அளிக்கின்றன. இதன் மூலம் அரசு மண்டிகள் வரும் காலங்களில் மூடப்படும் அபாயம் உள்ளது.
விவசாயிகளுக்கு நிர்ப்பந்தம்
அதேபோல மூன்றாவது சட்டம் பெரும் கோடீஸ்வரர்களை விவசாயிகளுடன் நேரடியாக ஒப்பந்தங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கிறது. யார் குறைந்த விலையில் பொருட்களை தருவார்களோ, அவர்களிடம் இருந்துதான் பெரு நிறுவனங்கள் பொருட்களைக் கொள்முதல் செய்யும். இதனால் ஒரு கட்டத்தில் அவர்கள் சொல்லும் மிகக் குறைந்த விலைக்குப் பயிர்களை விற்க வேண்டிய நிர்ப்பந்தம் விவசாயிகளுக்கு ஏற்படும்" என்றார்.
100 மாதங்கள்
தங்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை என விவசாயிகள் நினைத்தால் இது குறித்து நீதிமன்றத்தில் கூட முறையிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தற்போது விவசாயிகள் போராட்டம் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதனால் யாரும் நம்பிக்கை இழந்துவிடாதீர்கள். 100 வாரங்கள் ஆனாலும் சரி, 100 மாதங்கள் ஆனாலும் சரி இந்தக் கறுப்புச் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும் வரை இந்தப் போராட்டத்தைத் தொடர வேண்டும் என்றும் அதற்குக் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு முழுமையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.