ராகுல்காந்தி மீது போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மதுரை நீதிமன்றத்தில் வழக்கு!
மதுரை: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் தென்மேற்கு பகுதியில் உள்ள கன்டோன்மென்ட் பகுதியில் 9 வயது தலித் சிறுமி பூசாரி மற்றும் 3 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.

ராகுல் காந்தி சந்திப்பு
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை எற்படுத்தியது. சிறுமிக்கு நீதி வேண்டும் என பலர் தொடர் போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு நேரில் சென்ற காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். அவர்களுடன் இருந்த புகைப்படத்தை தனது ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார் அதனை பல்வேறு காங்கிரஸ் கட்சி பிரமுகர்களும் பகிர்ந்துள்ளனர்.

படங்கள் பகிர்ந்தார்
ராகுல் காந்தி.போஸ்கோ சட்டத்தின்படி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான சிறுவர்-சிறுமிகளின் புகைப்படங்களையோ அல்லது அவர்களது உறவினர்களின் புகைப்படங்களையோ செய்தி ஊடகங்களிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ பதிவிடக் கூடாது. ராகுல் காந்தியின் இந்த பதிவிற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக NCPCR எனப்படும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ட்விட்டர் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கம் முடக்கப்பட்டது. இதனை பகிர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் டுவிட்டர் பக்கமும் முடக்கப்பட்டது.

நீதிமன்றத்தில் வழக்கு
இதேபோல் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வலியுறுத்தியதன்பேரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவு நீக்கப்பட்டது. இதற்கிடையே இந்த் விவகாரம் தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிராக மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மதுரையை சேர்ந்த முகமதுரஸ்வி என்பவர் தாக்கல் செய்த மனுவில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவின் (போக்சோ சட்டத்தின்) கீழ் ராகுல்காந்தி, மாணிக்தாகூர், கே.சி.வேணுகோபால் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அண்ணாநகர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நடவடிக்கை வேண்டும்
எனவே ராகுல்காந்தி உள்ளிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டது. இந்த மனு நீதிபதி பிரவீனகுமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் முகமது ரஸ்வி தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜரானார்கள். அப்போது நீதிபதி செப்டம்பர் 3ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications