அடேங்கப்பா.. கிடா, சேவல்.. மெகா கறி விருந்து! ஆண்களுக்கு மட்டுமே அனுமதி! ஒன்று கூடிய 10 ஆயிரம் பேர்
மதுரை: பொதுவாக திருவிழா என்றாலே மக்களுக்கு கொண்டாட்டம்தான். அதுவும் கிராமப்புறங்களில் நடக்கும் கோவில் திருவிழாக்கள் களைகட்டும். ஆணும், பெண்ணும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் திருவிழாக்கள் எப்போதும் சிறப்புதான்.
ஆனால் பெண்கள் இல்லமால் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் திருவிழாக்கள் பற்றி கேள்விபட்டு இருக்கிறீர்களா? இப்படி ஒரு திருவிழா நம்ம தமிழகத்தில் வருடம்தோறும் நடந்து வருகிறது. அதனை பற்றி காண்போம்.

ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா
மதுரை மாவட்டம் திருமங்கலம் கரடிக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட அனுப்பபட்டி கிராமத்தில் 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த கரும்பாறை முத்தையா திருக்கோவிலில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் அசைவ திருவிழா நடைபெற்றது.இந்த கோவிலில் பல ஆண்டுகளாக மார்கழி மாதம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்து வருகிறது.

பெண்களுக்கு அனுமதி கிடையாது
இந்த திருவிழாவில் பிறந்த பெண் குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையிலான பெண்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. இந்த ஆண்டு கரும்பாறை முத்தையா கோவில் திருவிழா இன்று காலை நடந்தது. பொங்கல் வைத்து வழிபாட்டை முடித்த பிறகு மெகா அசைவ உணவு திருவிழா தொடங்கியது. இதற்காக 60-க்கும் மேற்பட்ட கிடாக்கள் பலியிடப்பட்டு உணவு சமைக்கப்பட்டன. இதேபோல் 40 க்கும் மேற்பட்ட சேவல்களும் வெட்டப்பட்டு சமைக்கப்பட்டன.

மெகா கறி விருந்து
50-க்கும் மேற்பட்ட மூடை கொண்ட அரிசியில் சாதம் வடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து விருந்து தயாரானது. அங்கு கூடியிருந்த சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு இலை போட்டு ஆட்டுக்கறியும், சேவல் குழம்பும், சாதமும் பரிமாறப்பட்டது. மெகா கறிவிருந்தில் திருமங்கலம், கரடிக்கல், மாவிலிபட்டி, செக்காணூரணி, சோழவந் தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான ஆண்கள் கலந்து கொண்டனர்.

இலையை எடுக்க மாட்டார்கள்
அவர்கள் அனைவரும் வயிறாற உணவு உண்டனர். ஆண்கள் சாப்பிட்ட பிறகு இலையை எடுக்காமல் அப்படியே விட்டுச் சென்றனர். இது அங்கு கடைபிடிக்கப்படும் பாரம்பரிய வழக்கமாகும். ஆண்கள் சாப்பிடும் இலை காயும் வரை பெண்கள் யாரும் இந்த கோவில் பக்கம் யாரும் செல்வது கிடையாது.












Click it and Unblock the Notifications