திருச்செந்தூர் சென்ற மதுரை நிதீஷ்.. மண்ணில் விடை பெற்றாலும்.. மறு உயிர் பெற்ற ஏழு பேர்
மதுரை: இன்றைக்கு யாருக்கும் வாழ்க்கை நிச்சயம் இல்லை.. அடுத்தநொடி வாழ்க்கையில் நினைத்துபார்க்கவே முடியாத விஷயங்கள் நடந்துவிடும். அப்படித்தான் பொங்கல் பண்டிகை முடிந்து நண்பர்களுடன் திருச்செந்தூர் சென்ற நிதீஷ்குமார் என்ற இளைஞருக்கு நடந்தது. இன்று பூமியில் அவர் உயிருடன் இல்லை என்றாலும், உடல் உறுப்பு தானத்தால் ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார். அவர் மதுரையில் இருந்து தஞ்சாவூருக்கு 2 மணி நேரத்தில் வந்துள்ளார்.
பொதுவாக நல்ல நாளில், விடுமுறை காலங்களில், பொங்கல் போன்ற நீண்ட விடுமுறை காலங்களில் திடீரென ஏற்படும் விபத்து அந்த குடும்பத்தையே நிலைகுலைய செய்துவிடும். சிலரது கவனக்குறைவு, அஜாக்கிரதை, திடீரென உடனே வரும் நாய், எப்படி வேண்டுமானாலும் விபத்துக்கள் நடக்கலாம். ஆனால் அந்த நாள் அவர்களது வாழ்வையே இல்லாமல் செய்துவிடும். அப்படித்தான் மதுரையைச் சேர்ந்த நித்தீஷ்குமாருக்கு நடந்துள்ளது.

மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா என்பவருடைய மகன் நித்திஷ்குமாருக்கு 22 வயது ஆகிறது. இவர் மருந்தியல் பட்டப்படிப்பு முடித்து விட்டு, தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்தார்.
இந்தநிலையில், பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய நித்தீஷ்குமார் கடந்த 18-ந் தேதி, தனது நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் தொலைதூர பயணமாக திருச்செந்தூர் சென்றார். அப்போது அவர்கள் சென்ற வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. இதில் மோட்டார்சைக்களின் பின்னால் இருந்த நித்திஷ்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர் தூத்துக்குடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கிருந்து, மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், 19-ந்தேதி இரவு, மதுரை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு நேற்று முன்தினம் இரவு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து அவருடைய குடும்பத்தினரிடம் டாக்டர்கள் கூறினார்கள். இதனை தொடர்ந்து, நித்திஷ்குமாரின் உடல் உறுப்புகளை, தானம் செய்வது குறித்து, அவரது தாயார் ஜெயலட்சுமியிடம் விளக்கினார்கள். அவரும், உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு ஒப்புக்கொண்டார்.
அதன்படி, அவரது உடல் உறுப்புகளை, அரசு டாக்டர்கள் குழுவினர் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். இதனை தொடர்ந்து, தஞ்சையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு இதயமும், கல்லீரல் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கும், ஒரு சிறுநீரகம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்றொரு சிறுநீரகம், கருவிழிகள், தோல் திசு ஆகியவை மதுரை அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டன.
இந்த உடல் உறுப்புகள், அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ்கள் மூலமாக தஞ்சைக்கும், திருச்சிக்கும் பசுமை வழித்தடம் மூலமாக விரைவாக அனுப்பி வைக்கப்பட்டன. மதுரையில் இருந்து இதயம் தஞ்சாவூருக்கு 2 மணி நேரத்தில் சென்றது. நிதீஷ்குமார் இன்று பூமியில் அவர் உயிருடன் இல்லை என்றாலும, உடல் உறுப்பு தானத்தால் ஏழு பேருக்கு மறுவாழ்வு அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications