முதல்வர் ஸ்டாலினுக்கு ‘பெரியப்பா’.. எம்ஜிஆர் படத்தை அகற்றியது ஏன்? அதிமுக ‘மாஜி’ அமைச்சர் கேள்வி!
மதுரை வந்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிமுக மாஜி அமைச்சர் ஆர்பி உதயகுமார் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார்.
மதுரை : எம்ஜிஆரை பெரியப்பா எனக் கூறும் முதல்வர் ஸ்டாலின், மதுரை தமிழ் சங்கத்தில் அவரின் படம் அகற்றப்பட்டதை கள ஆய்வு செய்வாரா? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயல்லிதா ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட திட்டங்களை இருட்டடிப்பு செய்தது போல், எம்ஜிஆரின் படமும் இருட்டடிப்பு செய்யப்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரை தமிழ்ச் சங்கத்தில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளதாக ஆர்.பிஉதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.

எம்ஜிஆர் படம்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், இரண்டு நாட்கள் மதுரை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மதுரை வந்த முதல்வர் ஸ்டாலின், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொண்டுள்ளார். இன்று மாலை வரை மதுரையில் கள ஆய்வில் ஈடுபடுகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார், மதுரை வந்திருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மதுரை தமிழ்ச் சங்கத்தில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் படம் அகற்றப்பட்டிருப்பது பற்றி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் உதயகுமார்.

பெரியப்பா எம்ஜிஆர்
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகத் தமிழ் சங்கத்தை மதுரையில் நடத்தி, எட்டாவது வள்ளலாக எம்ஜிஆர் திகழ்கிறார். உலகத் தமிழ் சங்கத்தில் எம்ஜிஆர் படம் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், அந்த படம் தற்போது அகற்றப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் எம்ஜிஆரை பெரியப்பா என்று கூறி வருகிறார். தற்போது எம்ஜிஆர் படம் அகற்றப்பட்டது அவரின் கவனத்திற்கு வந்ததா? எம்ஜிஆர் என்னை வளர்த்தெடுத்தார் என இன்று வரலாற்றை திருத்தி கூறி வருவதே இன்றைக்கு விவாத பொருளாக உள்ளது. இன்றைக்கு எம்ஜிஆர் படத்தை அகற்றி இருப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை, உங்கள் மனசாட்சி ஏற்றுக்கொள்கிறதா?

கள ஆய்வு செய்வீர்களா
அண்ணாவின் தலைமையில் இயங்கி வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை, தனது திரைப்படங்கள் மூலம் தான் செல்லும் இடங்கள் எல்லாம் இயக்கத்தை வளர்க்க வேண்டும் என்று பாடுபட்ட எம்ஜிஆர் படத்தை அகற்றியது நியாயம் தானா? மதுரையில் கள ஆய்வுக்கு வந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், கள ஆய்வில் முதலில் எம்ஜிஆர் படம் எங்கே போனது என்று கேள்வி எழுப்பினால்,எம்ஜிஆர் பக்தர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள்.

எம்ஜிஆர் பக்தர்கள்
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஜெயலலிதாவின் திட்டங்கள் இரட்டடிப்பு செய்யப்பட்டது போல் எம்ஜிஆர் படமும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. எம்ஜிஆர் படம் எங்கே போனது என்று உலக தமிழ்சங்கத்தில் பணிபுரிவோரிடம் கேள்வி எழுப்பி, மீண்டும் அவரது படத்தை அங்கு வைத்தால் எம்ஜிஆர் பக்தர்கள் உங்களை ஏற்றுக் கொள்வார்கள்" என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications