மதுரையையும் கொஞ்சம் பாருங்க.. எடப்பாடி எடுத்த ஆக்ஷன் அப்படியே நின்னுடுச்சு.. ஆர்பி உதயகுமார் பரபர!
மதுரை : மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக உயர்த்திட எடப்பாடி பழனிசாமி எடுத்த நடவடிக்கைகளை திமுக அரசு விரைவுபடுத்துமா, கிடப்பில் போடுமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தென் மாவட்டங்களின் முக்கிய மையமாக விளங்கும் மதுரையில் இருக்கும் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்த வேண்டும் என்பது தென்மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு.
இந்த விமான நிலைய மேம்பாட்டுக்காக, 550 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளதாக சமீபத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். எனினும், நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட பணிகளில் விமான நிலைய விரிவாக்கப் பணி தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், அதிமுக ஆட்சியில் வேகமாக நடந்த பணி, திமுக ஆட்சியில் சுணங்கிவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் சர்வதேச விமான நிலையம்
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற தமிழக அரசு மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் எம்.எல்.ஏவுமான ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உருவாக்கிட மத்திய அரசு 550 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. அந்த விமான நிலைய விரிவாக்கத்திற்கு 633.17 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் எடப்பாடியார் தலைமையிலான அதிமுக ஆட்சியில், அயன்பாப்பாக்குடி, குசவன்குண்டு, பாப்பானோடை, ராமன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் பட்டா நிலங்கள், அரசு புறம்போக்கு நிலங்கள் என 528.65 நிலங்களை முழுமையாக ஒப்படைக்கப்பட்டது.
மதுரைக்கும் அக்கறை காட்டுங்க
குறிப்பாக 90 சதவீதம் அளவில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 104.52 ஏக்கர் நிலங்களை நிலங்களை திமுக அரசு துரிதப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலகட்டத்தின் போது நிலம் எடுக்கும் பணி தாமதமானது. தற்போது சகஜமாக நிலை திரும்பிவிட்டது. மத்திய அரசு எதிர்பார்க்கும் வகையில் திமுக அரசு ஒத்துழைப்பு கொடுக்க முன்வர வேண்டும். சென்னையில் புதிதாக உருவாக்கப்படும் விமான நிலையத்திற்கு காட்டும் அக்கறையை மதுரைக்கும் காட்ட வேண்டும்.
அண்டர் பாஸ்
மதுரை மாவட்டம் தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டமாக உள்ளது. தற்போது சுற்றுலா மாவட்டமாக உள்ளது. இந்த புதிய பன்னாட்டு விமான நிலையத்தின் மூலம் தொழில் வளர்ச்சி, விவசாய வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி, கல்வி வளர்ச்சி ஆகியவை உருவாகும். ஏற்கனவே சர்வதேச விமான நிலையம் உருவாவதற்கு ரிங் ரோடு பகுதியில் 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை உள்ள தேவையாகும். அப்படி அந்த நிலத்தை எடுக்கும் பட்சத்தில் வாகனங்கள் ஒன்பது கிலோமீட்டர் சுற்றி செல்லும் சூழ்நிலை ஏற்படும், அதனால் அண்டர் பாஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டது.
கிடப்பில் போடுமா?
இதற்காக எடப்பாடியார் ஆட்சி காலத்தில் இதற்காக என்.ஓ.சி. வழங்கப்பட்டது அண்டர்பாஸ் திட்டம் மைசூர், வாரணாசியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் முதல் முறையாக மதுரையில் செயல்பட உள்ளது. ஆகவே மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக உயர்த்திட, எடப்பாடியார் தலைமையிலான அம்மா அரசு எடுத்த நடவடிக்கைகளை திமுக அரசு விரைவுபடுத்துமா? கிடப்பில் போடுமா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.