ஆட்சிக்கு வந்ததும் பேச்சுரிமையை தடுப்பதா? கரூர் பாஜக கூட்டத்துக்கு அனுமதி! மதுரை ஹைகோர்ட் அதிரடி
மதுரை: கரூரில் நாளை பாஜக சார்பில் நடத்தப்படும் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது. அப்போது ‛‛ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும் எதிர்க்கட்சியினர் பொதுமக்களிடம் கூறும் கருத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கிறது. இது நடக்க கூடாது'' என்பன உள்பட சில முக்கிய கருத்துகளை நீதிமன்றம் தெரிவித்தது.
கரூரில் திருவள்ளூவர் விளையாட்டு மைதானத்தில் நாளை பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக பாஜக சார்பில் கரூர் மாநகராட்சி ஆணையரிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்கு அவர் முதலில் அனுமதி வழங்கினார்.

அதன்பிறகு பொதுக்கூட்டத்துக்கான அனுமதி திடீரென ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்ட பாஜக நிர்வாகி கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், கரூர் திருவள்ளூவர் விளையாட்டு மைதானத்தில் பாஜக பொதுக்கூட்டம் நடத்தும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு தடை விதிப்பதோடு, பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க கரூர் மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட விபரங்கள் கூறப்பட்டு இருந்தன.
இந்த மனு இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தது. அதாவது, ‛‛நாட்டில் கருத்துரிமை, பேச்சுரிமையை யாரும் தடுக்கக்கூடாது. ஒரு கட்சி ஆட்சிக்கு வந்ததும் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் பொதுமக்களிடம் கருத்து தெரிவிப்பதை தடுக்க எடுக்கிறது. அதன்பிறகு எதிர்கட்சியும் சில ஆண்டுகளில் ஆளும்கட்சியாக மாறும்போது இதே வேலையை செய்கிறது.
ஒவ்வொருவரும் தங்களின் கருத்துகளை வெளியிட அனுமதிக்க வேண்டும். கருத்துகளை கூறுவதை எந்த வகையிலும் முடக்க கூடாது. ஆனால் கருத்துரிமை, பேச்சுரிமையை தடுக்கும் முயற்சிகள் நடக்கிறது. இதை அனுமதிக்க முடியாது. மாறாக தனிப்பட்ட நபர்கள் நினைப்பதை பேச அனுமதிக்க வேண்டும். அது பொதுக்கூட்டமாக கூட இருக்கலாம். மேலும் இந்த வழக்கில் உரிய காரணமின்றி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
இந்த வேளையில் கரூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛கரூர் திருவள்ளூவர் மைதானத்தில் விளையாட்டு போட்டிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. அரசியல் சார்ந்த பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படுவது இல்லை'' என வாதம் வைத்தார். கரூர் மாநகராட்சி மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட மதுரை உயர்நீதிமன்றம் நாளை திட்டமிடப்பட்ட பாஜக பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications