தேர்தல் களை வந்துருச்சு..மல்லுக்கட்டும் மதுரை தலைகள்! ஜல்லிக்கட்டு பக்கம் திரும்பிய டாக்டர்.சரவணன்!
மதுரை: 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராகி வரும் நிலையில் தங்கள் பகுதிகளில் தேர்தல் வேலைகளை உள்ளூர் தலைவர்கள் துவக்கி விட்டனர். மதுரை வடக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டிருக்கும் மதுரை டாக்டர் சரவணன், 10 ரூபாய்க்கு இட்லி பொங்கல், இருபது ரூபாய்க்கு பிரியாணி என மாற்றி யோசித்து வருகிறார். இந்த நிலையில் மதுரையின் அடையாளமான ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் பட்டு வேட்டி சேலையோடு 5000 ரூபாயை பரிசாக கொடுத்திருக்கிறார் சரவணன்.
தமிழ்நாடு மற்றொரு சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. 2011, 2016 சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக வெண்கலையில் 2021ல் மீண்டும் ஆட்சியை திமுக கைப்பற்றியது. இதுவரை திமுக அடுத்தடுத்து இரு சட்டமன்றத் தேர்தல்களில் வென்றதில்லை.
அதேபோல அதிமுகவும் அடுத்தடுத்து இரு சட்டமன்றத் தேர்தல்களில் தோற்றதில்லை. இந்த சாதனையை எப்படியாவது முறியடிக்க வேண்டுமென இரு கட்சிகளுமே தீவிரமாக களப்பணியாற்றி வருகின்றன. வழக்கமாக தேர்தலுக்கு முன்னர் வரும் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகைகள் வாக்காளர்களை மிகச் சிறப்பாக கவனிக்க வைக்கும்.

2026 சட்டமன்ற தேர்தல்
அந்த வகையில் கடந்த தீபாவளி பண்டிகையின் போதும் பொங்கல் பண்டிகையின் போதும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், தங்கள் பகுதிகளில் உள்ள கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தீபாவளி -பொங்கல் பரிசுகளை வழங்கி வருகின்றனர். தற்போது கூட தமிழகம் முழுவதும் திமுக தரப்பில் அண்டா ஹாட் பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. திமுகவுக்கு சளைத்தவர்கள் அல்ல நாங்கள் என அதிமுகவினரும் தங்கள் பகுதிகளில் வாக்காளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வருகின்றனர்.
மதுரை அரசியல் நிலவரம்
அது மட்டும் இல்லாமல் கோவில் திருவிழாக்கள் ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகைகளை ஒட்டி நன்கொடைகள், பரிசு பொருட்கள் வாங்கிக் கொடுப்பது, திருவிழாக்களில் கலந்து கொள்வது, திருமண நிகழ்வுகளில் பங்கேற்பது என மிகவும் பிசியாக வலம் வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் மத்திய மாவட்டமான மதுரையில் இருக்கும் அரசியல் புள்ளிகள் தீவிரமாக தேர்தல் வேலையை தொடங்கி விட்டனர்.
டாக்டர் சரவணன்
அதிமுக தரப்பில் மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் டாக்டர் சரவணன் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தாலும் தனக்கு செல்வாக்குள்ள மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியில் இந்த முறை போட்டியிட விருப்பமான தாக்கல் செய்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் வேலை பார்த்ததால் நிச்சயம் அவருக்கு இந்த தொகுதி ஒதுக்கப்படும் என சொல்லப்படுகிறது.
மலிவு விலை உணவகம்
இதனை அடுத்து கடந்த சில மாதங்களாகவே அந்த பகுதியில் தீவிரமாக வேலை பார்த்து வருகிறார் சரவணன். மேலும் எடப்பாடி பழனிச்சாமி மதுரை வந்தபோது பொதுமக்களுக்கு வேட்டி சேலை உள்ளிட்டவற்றை வழங்கி அழைப்பு விடுத்தார். மேலும் தீபாவளி பொங்கல் பண்டிகையின் போதும் சிறப்பான கவனிப்பு இருந்தது. தற்போது அடுத்ததாக ஒரு புது ஐடியாவை யோசித்து இருக்கிறார் சரவணன். சூர்யா டிரஸ்ட் - சரவணா மருத்துவமனை இணைந்து மலிவு விலை நடமாடும் உணவகத்தை தொடங்கி வைத்திருக்கிறார் சரவணன்.
20 ரூபாய் பிரியாணி
அதில், காலையில் 10 ரூபாய்க்கு நான்கு இட்லி, டீ வழங்கப்பட்டது. பின்னர் இரவில் 20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணியும், 10 ரூபாய்க்கு முட்டை பிரியாணியும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அடுத்ததாக மதுரைக்கு பெயர் போன ஜல்லிக்கட்டு பக்கம் பார்வையை திருப்பியுள்ளார் சரவணன். அதிமுகவின் தேர்தல் வாக்குறுதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் அறிவித்துள்ள நலத் திட்டங்களுக்கு நன்றி தெரிவித்துள்ள ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர்களையும், மாடுபிடி வீரர்களையும் கெளரவிக்கும் விழாவை நடத்தியுள்ளார் அதிமுக மருத்துவ அணி இணைச் செயலாளர் டாக்டர்.சரவணன்.
ஜல்லிக்கட்டு
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் உரிமையாளர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பட்டுவேஷ்டி, சேலை மற்றும் 5000/-ரூபாய் ரொக்கத் தொகையும், மாடுபிடி வீரர்களுக்கு பட்டு வேட்டியுடன் 5000/-ரூபாய் ரொக்கத் தொகையும் வழங்கியிருக்கிறார். அதிமுக ஆட்சி அமைந்தால் மதுரை வடக்கில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் எனவும் சொல்லியுள்ளார் சரவணன்.












Click it and Unblock the Notifications