கலப்பு திருமணம்.. 25 குடும்பங்களுக்கு திருவிழாவில் அனுமதி மறுத்த ஊர்மக்கள்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
மதுரை : கலப்பு திருமணம் செய்ததால் திருவிழாவில் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நல்லூர் கிராமத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட 25 குடும்பத்தினர் கோவில் திருவிழாவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
பொன்னமராவதியை அடுத்த நல்லூர் கிராமத்தில் கலப்புத் திருமணம் செய்து கொண்டதால் கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள அனுமதி மறுக்கின்றனர் என்றும், திருவிழாவிற்கு தங்களிடம் மட்டும் வரி வாங்க மறுக்கின்றனர் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வாதங்களைக் கேட்ட நீதிபதி, சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட 25 குடும்பத்தினர் நல்லூர் கோவில் திருவிழாவில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், 25 குடும்பத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்தும் தலைக்கட்டு வரி வசூல் செய்யவும், திருவிழாவில் பங்கேற்க அனுமதி அளித்தும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.