வீடு கட்ட போறீங்களா? தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவை பாருங்க
மதுரை: அனுமதி பெறாமல் கட்டிய கட்டிடங்கள் மீது தாமதம் இன்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டின் ஊரக மற்றும் நகர்புறங்களில் அனுமதி பெறாமல் வீடு கட்ட முடியாது. வீட்டு மனைக்கு பிளாட் போடும் போதே, அந்த பகுதியை பொறுத்து அகலமான சாலை, பூங்கா, அரசு கட்டிடங்களுக்கு இடம் ஒதுக்குவது, சாக்கடை கால்வாய்கள் கட்டுவதுபோன்ற பணிகளை லே அவுட் போடுவோர் செய்தாக வேண்டும்.. அப்படி செய்தால் மட்டுமே பிளாட் போட அரசு அனுமதி தரும்.. அதேநேரம் முன்பு அனுமதி பெறாமல் வீட்டு மனைகள் விற்கப்பட்டன. அப்படி விற்கப்பட்ட வீட்டு மனைகளில் வீடு கட்ட வேண்டும் என்றால் கண்டிப்பாக தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும்.

வீடு கட்ட அனுமதி என்பது அந்த பகுதியின் மண் மற்றும் நிலத்தை பொறுத்து தான் மாடிகள் மற்றும் கட்டிடங்கள் கட்ட அனுமதிப்பார்கள்.. இஷ்டத்திற்கு அந்த பகுதிகளில் வீடு கட்டிவிட முடியாது. பெரிய வணிக நிறுவனங்கள் என்றால் அதற்கு ஒரு விதிகளும், அடுக்குமாடி கட்டிடங்கள் என்றால் அதற்கு என்று விதிகளும் தமிழகத்தில் உள்ளன. மேலும் வீடுகள் கட்டவும் விதிமுறைகள் உள்ளன. அதன்படி விண்ணப்பித்தால் அரசு பரிசீலித்து கட்டிடம் அல்லது வீடு கட்ட அனுமதி அளிக்கும். ஏனெனில் சில இடங்களில நீர் வழிப்பாதைகள் இருக்கும். ஏரிகளாக இருக்கும். அதை மறைத்து வீடு கட்டிவிட்டால் அந்த பகுதிகள் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதிகளும் வெள்ளத்தில் பாதிக்கப்படும். இதை தடுக்கவே அரசு இந்த நடவடிக்கை எடுக்கிறது.
இந்நிலையில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லீமா ரோஸ், கரூரைச் சேர்ந்த துரைராஜ் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பலர், தங்கள் பகுதிகளில் அனுமதி பெறாமல் ஏராளமான கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதாகவும். இதன் காரணமாக கடும் மழை, புயல் நேரங்களில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் சூழ்ந்து விடுவதால், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அரசு அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு உள்பட்ட மாநகராட்சி பகுதிகளில் அனுமதி பெறாத கட்டிடங்களை ஆய்வு செய்து, அந்தந்த உள்ளாட்சி தொடர்புடைய வழக்கறிஞர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் விதிமீறல் கட்டிடங்கள் குறித்து அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் தலைமையில் உயர்நிலை குழு அமைத்து ஆய்வு நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.
அதன்பேரில், அந்தந்த மாவட்டத்தில் கலெக்டர்கள் தலைமையில் அதிகாரிகள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உள்ளதாகவும், இதுபற்றி அரசாணை பிறப்பிக்கப்பட்டு இருப்பதாகவும் அரசு வக்கீல் விசாரணையில் கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், தனபால் ஆகியோர் முன்பு மீண்டும் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தாமதம் இன்றி அனுமதி பெறாத கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.












Click it and Unblock the Notifications