மதுரை வந்த ஜேபி நட்டா.. ஹோட்டலில் பரபர மீட்டிங்.. ‘ஹெலிகாப்டர்’- பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை!
மதுரை : பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விமானத்தில் இன்று மதுரை வந்துள்ளார். விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் வரவேற்பு அளித்தனர்.
2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பாஜக தேசிய தலைவர் நட்டா, சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடிக்குச் செல்லும் நட்டா, இன்று மாலை பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
நாளை வரை பல்வேறு கட்டங்களாக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன், கட்சியை பலப்படுத்துவது பற்றியும், 2024 தேர்தல் பற்றியும் ஆலோசனை நடத்துகிறார் நட்டா.
விடாத ஸ்டாலின்! 5 பக்கத்திலிருந்து அம்பு.. சிக்கியது எல்லாம் டாப்
மதுரை வந்த நட்டா
2 நாள் பயணமாக தமிழகம் வருகை தந்துள்ளார் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா. விமானத்தில் இன்று மதுரை வந்தடைந்தார் நட்டா. மதுரை விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேள தாளங்களுடன், வழி நெடுகிலும் மலர் தூவி ஜே.பி.நட்டாவிற்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பிரபலங்களுடன் மீட்டிங்
பின்னர் விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஹோட்டலில் பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலமானவர்களை சந்தித்து பேசி வருகிறார் நட்டா. எம்.பி தேர்தலை குறிவைத்து பல்வேறு பணிகளைச் செய்து வரும் பாஜக, பிரபலமானவர்களை கட்சியில் இழுத்து வருகிறது. அந்த வகையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
பாஜக மீட்டிங்
மதுரையில் இருந்து ஹெலிகாப்டரில் காரைக்குடிக்கு கிளம்பும் நட்டா, மாலை 3.30 மணிக்கு காரைக்குடி எம்.ஏ.எம் மகாலில் நடைபெறும் பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். மேலும், முக்கிய நிர்வாகிகளுடன் தனியாக ஆலோசனையும் நடத்த இருக்கிறார். பாஜக மகளிர் அணி நிர்வாகிகளுடனும் தனியாக ஆலோசனை நடத்துகிறார்.
பொதுக்கூட்டம்
இரவு என்.ஜி.ஓ காலனி அருகே உள்ள மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேச இருக்கிறார் ஜேபி நட்டா. பொதுக்கூட்டம் முடிந்து இரவில் செட்டிநாடு பேலஸில் தங்குகிறார். அப்போதும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என்று கூறப்படுகிறது.
2 நாட்களும்
நாளை காலை 7 மணிக்கு பிள்ளையார்பட்டி கோயில் செல்கிறார் நட்டா. அங்கு வழிபாடு முடிந்ததும், பாஜக தொண்டர் வீட்டில் காலை உணவு அருந்துகிறார். மீண்டும் செட்டிநாடு பேலஸ் செல்லும் அவர் ஓபிசி மற்றும் எஸ்சி அணி மாநில, மாவட்ட நிர்வாகிகள், பாஜக மாவட்ட தலைவர், மாவட்ட பார்வையாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
மருது சகோதரர்கள் நினைவிடம்
மதிய உணவுக்கு பிறகு சிவகங்கை நாடாளுமன்ற பூத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். பின்னர் திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் நினைவிடம் சென்று மரியாதை செலுத்துகிறார். மாலை 4 மணிக்கு மதுரைக்கு திரும்பும் அவர், மாலை 5.30 மணிக்கு மதுரையிலிருந்து விமானத்தில் மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
முக்கிய நிர்வாகிகள்
நட்டா பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் சோழன் சித.பழனிசாமி, பாஜக மாநில பொறுப்பாளர் சிடி ரவி, துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜ.க. சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் மற்றும் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர்.