ஹையா.. சிஎம் சாரே எனக்கு ஊட்டி விட்டாரே.. ஸ்டாலினால் சிற்றுண்டி ஊட்டப்பட்ட மாணவி பூரிப்பு
மதுரை: மதுரை பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சிற்றுண்டி திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர் மாணவ-மாணவிகளுக்கு உணவு ஊட்டி மகிழ்ந்தார். இந்நிலையில் தான் உணவு ஊட்டிய பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியது பற்றி மழலை குரலில் 2ம் வகுப்பு மாணவி மனம் திறந்து கூறியுள்ளார்.
பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் முன்னோடி மாநிலம் என்றால் அந்த பெருமை நிச்சயம் தமிழ்நாட்டை தான் சாரும். சுதந்திரத்துக்கு முன்பே பள்ளிகளில் மதிய உணவு வழங்கும் நடைமுறை தமிழகத்தில் இருந்தது. சுதந்திரத்துக்கு பிறகு தமிழக முதல்வராக வந்தவர்களும் பள்ளி மாணவர்களுக்கான உணவு வழங்கும் திட்டத்தில் அதிக கவனத்துடன் செயல்பட்டனர்.
காமராஜர் மதிய உணவு திட்டத்தை துவங்கிய நிலையில் எம்ஜிஆர் அதனை சத்துணவு திட்டமாக மாற்றம் செய்தார். கருணாநிதி முட்டைகள் வழங்கியதோடு, ஜெயலலிதா கலவை சாதம் உள்ளிட்டவற்றை வழங்கினார்.

காலை சிற்றுண்டி திட்டம்
அந்த வழியில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் நலன் கருதி கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் திட்டம் வகுத்தார். அதன்படி காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டசபையில் 110வது விதியின் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி மாநகராட்சிகள், நகராட்சிகள், தொலைதூர கிராமங்களில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல்கட்டமாக அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது.

மதுரையில் துவக்கிய ஸ்டாலின்
அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று மதுரையில் தொடங்கி வைத்தார். மதுரை நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை முதல்வர் ஸ்டாலின் பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். மேலும் மாணவிகளுக்கு உணவு ஊட்டி முதல்வர் ஸ்டாலின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

மாணவி கூறியது என்ன?
இந்நிலையில் ஸ்டாலின் உணவு ஊட்டியது பற்றி மாணவி ரித்திகா மழலை குரலில் தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இதுபற்றி அவர் கூறியதாவது: ‛‛ஸ்டாலின் ஐயா எனக்கு உணவு ஊட்டிவிட்டாங்க.. உணவு ஊட்டிவிட்டதற்கு பிறகு எந்த ஸ்டேண்டட் என கேட்டாரு. செகண்ட் ஸ்டேன்டனு சொன்னேன். பேரும் கேட்டாரு. ரித்திகானு சொன்னேன். சாப்பாடு நல்லா இருக்கானு கேட்டாரு. சாப்பாடு சூப்பரா இருக்குனு சொன்னேன். சிஎம் சார் பக்கத்துல இருந்து சாப்பிட்டது சந்தோஷமா இருக்கு. ரொம்ப பிடிச்சிருக்கு'' என கூறினார்.

குவியும் பாராட்டு
முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைத்த காலை சிற்றுண்டி திட்டம் முதற்கட்டமாக தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வினியோகிக்கப்படுகிறது. இதற்காக ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு தமிழகம் மட்டுமின்றி பல மாநிலங்களில் வசிப்பவர்கள் பாராட்டி வருகின்றனர். இதனால் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்த காலை சிற்றுண்டி திட்டம் இன்று ட்விட்டரில் கூட ட்ரெண்ட் ஆகி பாராட்டுகளை பெற்றது.












Click it and Unblock the Notifications