போதை பொருள் ஒழிப்பு.. தமிழ்நாடு அரசு தீவிரம்.. பாராட்டிய உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி
போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டியதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு
மதுரை: போதை பொருள் விற்பனை செய்த வழக்குகளில் ஜாமீன் கோரிய மனுக்களை விசாரித்த போது தமிழ்நாடு அரசை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி பாராட்டியுள்ளார்.
தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில் போதை பொருள் ஒழிப்பில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது.
போதை பொருட்கள் விற்பனை செய்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில் கஞ்சா விற்பனை செய்த வழக்குகளில் ஜாமீன் கோரிய மனுக்கள், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.
என்ன சொல்றேன்னா.. லைட்டா போதை வரும்! டாஸ்மாக் சரக்குக்கு பதில் இதை விற்கலாம்! பேரரசுவின் அடடே ஐடியா!
3 மாதங்களில்
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் 3 மாதங்களில் 10,673 வழக்குகள் பதியப்பட்டு 149.43 டன் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அறைகள் சென்னை, திருச்சி, மதுரை, தேனி மற்றும் கோவையில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு சாவி முறை பின்பற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி கூறியது என்ன
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி கஞ்சா போன்ற பொருட்களை மருத்துவ காரணம் தவிர்த்து உற்பத்தி செய்யவும் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் உபயோகப்படுத்தவும் தடை உள்ளது. போதை பொருள் தொடர்பான குற்றங்களுக்கு அதிகளவில் அபராதமும் தண்டனையும் விதிக்கப்படுகிறது.
10 ஆண்டுகள் தண்டனை
குறைந்தபட்சம் 10 ஆண்டுகளும் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் வரையிலும் சிறை தண்டனை வழங்கப்படுகிறது. சில வழக்குகளில் மரண தண்டனை கூட வழங்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்குகளில் குறிப்பிட காலத்திற்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படாததால் வணிக ரீதியான விற்பனை செய்து கைது செய்யப்பட்டோர் ஜாமீன் பெறும் நிலையில் உள்ளனர்.
போதை பொருட்கள்
தமிழ்நாட்டில் போதை பொருட்களை ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு தீவிரமாக மேற்கொண்டுள்ளது. மேலும் இதற்குத் தேவையான சுற்றறிக்கைகள் அரசு அவ்வப்போது வெளியிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி சுற்றுவட்டாரங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளின் பயன்பாட்டை தடுத்து தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் போதை பொருள் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சட்டசபையிலேயே கூறியுள்ளார்.
நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்
நீதிமன்றம் எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் தமிழக அரசின் சார்பில் உரிய நடவடிக்கையும், தேவையான சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. போதை பொருள் தடுப்பு கூடுதல் சிறப்பு நீதிமன்றங்களை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தலாம். இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை ஏற்கெனவே தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. சென்னையில் டிஐஜிக்கள் தலைமையில் போதை பொருள் ஒழிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. டிஐஜியின் சுற்றறிக்கை முழுமையாக பின்பற்றப்படும் என நம்புவதாக நீதிபதி புகழேந்தி தெரிவித்தார்.