முதல்வர் மு.க.ஸ்டாலினின் காரை திடீரென வழிமறித்த விளையாட்டு வீரர்.. பரபரப்பான மதுரை!
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் காரை வழிமறித்து மனு கொடுத்த மாற்றுத்திறனாளி பேட்மிண்டன் விளையாட்டு வீரரால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
அரசு பயிற்சியாளர் வேலை வேண்டும் என்று அவர் மு.க.ஸ்டாலினிடம் மனு கொடுத்தார். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் அவரிடம் உறுதி அளித்தார்.
பேட்மிண்டன் வீரர்
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் பேட்மிண்டன் வீரர் மற்றும் பயிற்சியாளர் பத்ரி நாராயணன். இவர் 17 பாரா பேட்மிண்டன் போட்டியில் சர்வதேச மற்றும் பல்வேறு தேசிய மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பதக்கம் வென்றவர்.இவர் கடந்த 10 ஆண்டுகளாக அரசு பயிற்சியாளர் வேலை வேண்டும் என்று மனு அளித்து வருகிறார்.
அரசு வேலை வேண்டும்
இதற்கு முன்னதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடமும் மதுரையில் நேரில் சந்தித்து மனு அளித்திருந்தார். அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் பேட்மிண்டன் வீரர் பத்ரி நாராயணனுக்கு அரசு வேலையை கொடுக்க வேண்டும் என பரிந்துரை செய்தது.
காரை வழிமறித்தார்
ஆனால் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகள் குறித்த ஆய்வுக்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை வந்தார். அப்போது அங்கு வந்த விளையாட்டு வீரர் பத்ரிநாராயணன் திடீரென மு.க.ஸ்டாலினின் காரை வழிமறித்தார். பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர்.
மனு கொடுத்தார்
அதனை தொடர்ந்து காரை நிறுத்தக் கூறிய மு க ஸ்டாலின் பத்ரிநாராயணனை நேரில் அழைத்தார். விளையாட்டு வீரர் பத்ரிநாராயணன் தனது கோரிக்கை குறித்து தெரிவித்து கோரிக்கை மனு குறிதது மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். அவருடைய மனுவை பெற்றுக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் ''உடனடியாக உங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும்'' என தெரிவித்தார். முதல்வரின் காரை வழிமறித்து குரலெழுப்பி நேரடியாக மனு கொடுத்ததால் கலெக்டர் அலுவலகத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.