உயர்ஜாதி 8 லட்சம் சம்பாதித்தாலும் ஏழைன்னா, நாங்க ஏன் 2.5 லட்சத்துக்கு வருமான வரி செலுத்தனும்: வழக்கு
மதுரை: ஆண்டுக்கு ரூ2.50 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்ற சட்டத்துக்கு இடைக்கால தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் திமுக பிரமுகர் சீனிவாசன் வழக்கு தொடர்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆண்டுக்கு ரூ2.50 லட்சத்துக்கு மேல் வருமான உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டும் என்கிறது மத்திய அரசு. அதேநேர்த்தில் ஆண்டுக்கு ரூ8 லட்சம் வருவாய் உள்ள முற்படுத்தப்பட்ட சமூகத்தினரை ஏழைகள் என வரையறை செய்கிறது மத்திய அரசு; அத்துடன் அந்த உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடும் வழங்குகிறது மத்திய அரசு.

10% இடஒதுக்கீடு
உயர்ஜாதி ஏழைகளுக்கான இந்த பொருளாதார அடிப்படையிலான 10% இடஒதுக்கீடு என்பது சமூக நீதிக்கு எதிரானது; இடஒதுக்கீடு நடைமுறைக்கே எதிரானது என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பு
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்தனர். ஆனாலும் பெரும்பான்மை அடிப்படையில் உயர்ஜாதி ஏழைகளுக்கு மத்திய அரசு வழங்கிய 10% இடஒதுக்கீடு செல்லும் என்கிற தீர்ப்பு வழங்கப்பட்டது. இத்தீர்ப்பு கடுமையான விவாதங்களை உருவாக்கி உள்ளது.

வருமான வரி வரம்பு- திமுக வழக்கு
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிப்புத்தூரை சேர்ந்த சீனிவாசன் என்ற திமுக பிரமுகர் ஒரு வழக்கைத் தொடர்ந்துள்ளார். திமுக சொத்து பாதுகாப்பு உறுப்பினராக இருக்கும் 82 வயது விருதுநகர் சீனிவாசன் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ஆண்டு வருமானம் ரூ8 லட்சம் உள்ளவர்கள் ஏழைகள் என மத்திய அரசு வரையறை செய்துவிட்டது. இதனை உச்சநீதிமன்றமும் உறுதி செய்து தீர்ப்பு அளித்துவிட்டது. இதன் பின்னரும் ஆண்டு வருமானம் ரூ8 லட்சத்துக்கு குறைவான வருவாய் பெறுகிறவர்கல் பணக்காரர்கள் என கூறி வருமான வரி பெறக் கூடாது; ஆகையால் ஆண்டு வருமானம் ரூ2.5 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் வருமான வரி கட்ட வேண்டும் என்ற சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

ஹைகோர்ட் பெஞ்ச் நோட்டீஸ்
இவ்வழக்கை மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன், சத்ய நாராயண பிரசாத் ஆகியோர் அடங்கிய சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கில் மத்திய நிதித்துறை, சட்டத்துறை ஆகியவற்றின் செயலாளர்கள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது மதுரை பெஞ்ச்.












Click it and Unblock the Notifications