மதுரையில் விடியவிடிய பெய்த கனமழை.. வெள்ளக்காடாக மாறிய சாலைகள்.. சிரமங்களை சந்திக்கும் மக்கள்!
மதுரை: மதுரையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் விடியவிடிய கனமழை பெய்தது. குறிப்பாக மதுரையில் நேற்று இரவு 7 மணியளவில் தொடங்கிய மழை, விடிய விடிய பெய்தது.
இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதோடு, ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர்.

விடியவிடிய பெய்த மழை
மதுரையில் மாலை 7 மணி முதல் விடிய விடிய பெய்த கனமழை பெய்தது. குறிப்பாக அண்ணாநகர், தெப்பக்குளம், மாட்டுத்தாவணி, பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம், முனிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. ஏற்கனவே மாட்டுத்தாவணி அருகே உள்ள கண்மாய் உடைந்து அப்பகுதி வெள்ளம் போல் சூழ்ந்து இருந்தது.

போக்குவரத்து பாதிப்பு
கடந்த 2 நாட்களாக அப்பகுதிகளில் தண்ணீரின் அளவு குறைந்த நிலையில், இரவு நேரத்தில் பெய்த மழையால் மீண்டும் வெள்ளக்காடு போல் காட்சியளிக்கிறது. இதனல அப்பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

கால்வாய் பணிகள் தேக்கம்
இதுமட்டுமல்லாமல் மாட்டுத்தாவணி அருகே உள்ள பகுதிகளில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் இரவு முழுவதும் மழை பெய்ததால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதன் காரணமாக கால்வாய் அமைக்கும் பணிகளிலும் தேக்கம் ஏற்பட்டுள்ளன. அதேபோல் பல்வேறு சாலைகளும் வெள்ளக்காடு போல் காட்சியளிப்பதில், மக்கள் சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

தென் மாவட்டங்களில் மழை
இதேபோல் திண்டுக்கல், சிவகங்கை மாவட்டங்களில் இரவு நேரத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. விருதுநகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் 3 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. அதோடு, தேனி மற்றும் நெல்லை மாவட்டங்களில் மிதமான மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.












Click it and Unblock the Notifications