எடப்பாடி மீது பழி போட ஓபிஎஸ் செய்த சூழ்ச்சி “கண்டுபிடிச்சிட்டோம்”- போட்டுத் தாக்கிய ஆர்பி உதயகுமார்!
மதுரை : எடப்பாடி பழனிசாமியின் முயற்சியால் தான் இந்த ஆண்டு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்க தடை ஏற்படுத்திட சூழ்ச்சி செய்தார்கள், அந்தப் பழியை நம் மீது சுமத்தவும் சூழ்ச்சி செய்கிறார்கள் என்று தெரிந்த பின்பு தான் நீதிமன்றத்துக்கு சென்றோம் என ஆர்பி உதயகுமார் கூறியுள்ளார்.
எடப்பாடியாருக்கு தேவரின் ஆசி இருப்பதினால் தேவர் திருமேனியிலே தங்க கவசம் சாத்தப்பட்டுள்ளது. எடப்பாடியாருக்கு தெய்வத் திருமகனார் அருளாசி இருந்த காரணத்தினால் தான் தமிழகத்தில் முதலமைச்சராக நான்கரை ஆண்டு காலம் பொறுப்பு வகித்தார் என்றும் உதயகுமார் பேசியுள்ளார்.
பதவி இல்லை என்ற காரணத்தினால் ஓபிஎஸ் செய்கின்ற சூதுகளையும், சூழ்ச்சிகளையும் நாங்கள் எதிர்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோம் என அவர் விமர்சித்துப் பேசினார்.
" title="விடாப்பிடி.. "முடியுமா.. நடக்குமா..?" எடப்பாடியை கால் வைக்க விடாத ஓபிஎஸ்.. கொண்டாடும் ஆதரவாளர்கள்!" />விடாப்பிடி.. "முடியுமா.. நடக்குமா..?" எடப்பாடியை கால் வைக்க விடாத ஓபிஎஸ்.. கொண்டாடும் ஆதரவாளர்கள்!
தேவர் தங்கக் கவசம்
தேவர் தங்கக் கவசத்தை வங்கியில் பெற்று விழாக்கமிட்டியாரிடம் ஒப்படைக்க, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருதரப்பும் கடுமையாக போட்டி போட்ட நிலையில் தேவர் தங்க கவசத்தை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் ஒப்படைக்குமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து, மதுரை வங்கியில் இருந்து மதுரை, ராமநாதபுரம் டி.ஆர்.ஓக்களிடம் தங்கக் கவசம் வழங்கப்பட்டு, அதை அவர்கள் பசும்பொன்னிற்கு கொண்டு சென்று அளித்துள்ளனர்.
எடப்பாடி பசும்பொன் வரவில்லை
இந்த தீர்ப்பு வருவதற்கு முன்னதாகவே, எடப்பாடி பழனிசாமி பசும்பொன் செல்லவில்லை என அதிமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தேவர் குருபூஜை நிகழ்வான அக்டோபர் 30ஆம் தேதி சென்னை நந்தனத்தில் இருக்கும் தேவர் சிலைக்கு ஈபிஎஸ் மரியாதை செலுத்துவார் என அறிவிக்கப்பட்டது. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமி, தேவர் குருபூஜைக்கு பசும்பொன் வராதது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈபிஎஸ் ஏன் பசும்பொன் வரவில்லை என்பதற்கான காரணங்களை அதிமுகவினர் மத்தியில் பேசியுள்ளார் ஈபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.
ஜெயலலிதா - எடப்பாடியார்
மருது பாண்டியர்களின் 221வது குருபூஜையை முன்னிட்டு மதுரை மாவட்டம் சிவரக்கோட்டையில் உள்ள மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் அதிமுக தொண்டர்கள் மத்தியில் பேசினார் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார். அப்போது பேசிய அவர், "மாமன்னர் மருது பாண்டியர்களுக்கு முதன் முதலில் அரசின் சார்பில் விழா நடத்தியவர் ஜெயலலிதா. அதனை தொடர்ந்து திருப்பத்தூரில் மணி மண்டபம் அமைத்தவர் ஜெயலலிதா, தற்போது சிவரக்கோட்டையில் மக்கள் கோரிக்கை ஏற்று மருதுபாண்டியர்கள் சிலை அமைக்க அரசாணை தந்தவர் எடப்பாடியார். பதிமூன்றரை கிலோ எடை உள்ள தங்ககவசத்தை ஜெயலலிதா பசும்பொன்னாருக்கு வழங்கினார்.
ஓபிஎஸ் சூழ்ச்சி
ஒவ்வொரு ஆண்டும் தேவர் குரு பூஜையில் தங்க கவசத்தை அதிமுக சார்பில் அணிவிப்பது தான் 2014 முதல் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த ஆண்டு துரோகத்தின் விளைவாக அந்த தங்க கவசத்தை அவரின் திருஉருவத்திற்கு சாத்த தடை ஏற்படுத்தி விடுமோ என்று மக்கள் அஞ்சினார்கள். இதற்கு தடை ஏற்படுத்திட சூழ்ச்சி செய்தார்கள், சூது செய்தார்கள், அந்தப் பழியை நம் மீது சுமத்த சூழ்ச்சியும் செய்கிறார்கள், வங்கி கணக்கை துரோகிகள் முடக்கப் பார்க்கிறார்கள் என்று தெரிந்த பின்பு தான் நீதிமன்றத்துக்குச் சென்றோம்.
மரண அடி
தெய்வீக திருமகனாருக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என எடப்பாடியார் கோரிக்கை வைத்த நிலையில் நீதிமன்றம் தீர்ப்பை அளித்திருக்கிறது. மாவட்ட வருவாய் அலுவலர் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன் மூலம் திருமகனாருக்கு கவசம் சாத்தியிருக்கின்ற காட்சி தென் மாவட்ட மக்களின் உள்ளம் குளிரச் செய்தது. அதனை இன்றைக்கு தடுக்க நினைத்தவர்கள், குழப்பத்தை விளைவிக்க நினைத்தவர்களுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் இன்றைக்கு எடப்பாடியார் முயற்சியிலே தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் சத்தியமான உண்மை.
தேவர் ஆசி எங்களுக்குத்தான்
இது அதிமுக சொத்து, ஜெயலலிதாவின் சொத்து. இதை கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் வங்கியில் முறையிட்டபோது வங்கி வழங்க தயாராக இருக்கும்போது அங்கே தடை ஏற்படுத்துகிறார்கள். பிறகு நீதிமன்ற ஆணையைப் பெற்று தங்க கவசம் வேண்டும் என்றபோது அங்கேயும் தடை ஏற்படுத்தினார்கள். தேவர் நினைவு ஆலய காப்பாளர்களிடம் முறையிட்டபோது அங்கேயும் சென்று தடை ஏற்படுத்தினார்கள். நீங்கள் எத்தனை தடை ஏற்படுத்தினாலும், தேவர் ஆசி உங்களுக்கு இல்லாத காரணத்தினால் உங்களால் கவசத்தை எடுக்க முடியவில்லை. எடப்பாடியாருக்கு தேவரின் ஆசி இருப்பதினால் தேவர் திருமேனியிலே தங்க கவசம் சாத்தப்பட்டுள்ளது.
பசும்பொன்னுக்கு எடப்பாடியார் ஏன் வரவில்லை
எடப்பாடியாருக்கு தெய்வத் திருமகனார் அருளாசி இருந்த காரணத்தினால் தான் அன்னை தமிழகத்தில் முதலமைச்சராக நான்கரை ஆண்டு காலம் இருந்தார். பதவி இல்லை என்ற காரணத்தினால் ஓபிஎஸ் செய்கின்ற சூதுகளையும், சூழ்ச்சிகளையும் நாங்கள் எதிர்கொண்டு போராடிக் கொண்டிருக்கிறோம். எடப்பாடியாருக்கு மாமன்னர் மருதுபாண்டியர்கள் ஆசியும் உண்டு, தேவர் திருமகனார் ஆசியும் உண்டு. மூக்கையா தேவர் ஆசியும் உண்டு. ஆனால் ஏன் பசும்பொன்னுக்கு எடப்பாடியார் வரவில்லை என்று விவாதம் செய்கிறார்கள். அவர்களின் சூழ்ச்சிகளும், சூதுகளும் இந்த அப்பாவி மக்களுக்கு தெரியாது, எங்களுக்குத் தான் தெரியும்.
நிச்சயமாக வருவார்
நிச்சயமாக எடப்பாடியார் பசும்பொன்னுக்கு வருவார். காளையார்கோவிலுக்கு வருவார். இந்த உசிலம்பட்டிக்கும் வருவார்.அ து நிச்சயமாக நடைபெறும். அந்த நாள் தென் தமிழ்நாட்டின் பொன்னாளாக அமையும். வரும் 30ஆம் தேதி சென்னை நந்தனத்தில் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட தெய்வத் திருமகனாரின் வெண்கல சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார் எடப்பாடியார்." எனப் பேசியுள்ளார்.