தேவையில்லாத கருத்து.. கற்பனை.. ரஜினியை விளாசிய எடப்பாடி பழனிச்சாமி.. கமல்ஹாசனுக்கும் குட்டு!
மதுரை: தேவையில்லாத கருத்தை கற்பனையோடு சொல்லக்கூடாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரஜினிகாந்த்தை விளாசியுள்ளார்.
மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அப்போது அவர் கூறியதாவது:
நேற்றைய தினம், கொரோனா வைரஸ் பற்றி மூத்த அமைச்சர்கள், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், வருவாய்த்துறை அமைச்சர் மற்றும் அந்தத் துறைகளின் செயலாளர்கள் எல்லோருடனும் கலந்தாலோசித்து வைரஸை, எப்படி கட்டுப்படுத்துவது என்பதை பற்றி ஆலோசித்து விரைவாக ஒரு அறிக்கை வெளியிட உள்ளோம். தமிழகத்தில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. பிற, கல்வி நிலையங்களையோ, வணிக வளாகங்களையோ மூடும் அளவுக்கு பாதிப்பு இல்லை. இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.
ரஜினிகாந்த் அளித்த செய்தியாளர் பேட்டி தொடர்பாக அப்போது, நிருபர்கள், கேள்வி எழுப்பினர். இதற்கு காட்டமாக, பதிலளித்த முதல்வர், "அவர் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. கட்சி ஆரம்பிக்காதபோது அது பற்றி விவாதிக்க வேண்டாம்." என்றார்.
சிஏஏ பற்றி அச்சம் எதற்கு.. வாங்க, பேசலாம்.. 49 இஸ்லாமிய அமைப்புகளுடன் தமிழக தலைமைச் செயலாளர் ஆலோசனை
அதிமுக குபேர பண பலத்தோடு இருப்பதாக ரஜினிகாந்த் கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, "கட்சியே ஆரம்பிக்கவில்லை.. அப்படியிருக்கும்போது, அவர், தேவையில்லாத கருத்தை கற்பனையோடு சொல்லக்கூடாது." என்றார்.
அதிமுகவைவிடவும், பாஜக அதிக எம்எல்ஏக்களை பெறும் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் கூறியுள்ளது பற்றி நிருபர்கள் கேட்டதற்கு, எல்லோருமே, தங்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். அந்தவகையில் அவர் கருத்து கூறியிருக்கிறார், என்றார்.
சந்திப்போம் என்று சொல்ல மாட்டேன்.. சந்தித்தே ஆக வேண்டும் என்று கமல்ஹாசன் கூறியுள்ளாரே என்ற நிருபர் கேள்விக்கு, சிரித்தபடியே, பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, "யார் அவரை சந்திக்க வேண்டாம் எனஅறு கூறினார்கள்? ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். அதில் எந்த தடையும் கிடையாது. கமல்ஹாசன் சக்திதான் என்னவென்பதை கடந்த தேர்தலிலேயே பார்த்து விட்டோமே." என்றார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சி தலைவர் டிடிவி தினகரன், இனிதான் தங்களுக்கு தொண்டர் பலம் அதிகரிக்க போகிறது என்று கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, "முன்பும் அதே மாதிரி தான் பேசினார். இப்போதும் பேசுகிறார். தேர்தலுக்கு பிறகு அந்த கட்சி இருக்குமா இல்லையா என்பது தெரியும்." இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.