சசிகலா என்ன சொல்றது? நீதிமன்றமே சொல்லியாச்சு.. ஒற்றை வார்த்தை ட்வீட்டுக்கு ஆர்.பி.உதயகுமார் ரிப்ளை!
மதுரை : சசிகலா, 'ஒற்றுமை' என ஒற்றை வார்த்தை ட்வீட் ட்ரெண்டில் பதிவிட்டிருந்த நிலையில், அது குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் கூறியுள்ளார்.
நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம், நீதிமன்றமே அதிமுக ஒற்றுமையாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது எனக் கூறியுள்ளார் ஆர்பி உதயகுமார்.
மேலும், தீர்ப்புக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி தலைமையில் திமுக அரசை தோலுரித்து காட்டுவதற்கும், மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவற்கும் அதிமுக தொண்டர்கள் உழைக்க தயாராகி விட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு வார்த்தை ட்ரெண்ட்
அமெரிக்காவின் ரயில்வே சேவை நிறுவனமான ஆம்ட்ராக், 'ட்ரெய்ன்ஸ்' என ஒரு வார்த்தையில் ட்வீட் செய்ததை தொடர்ந்து, பல்வேறு வணிக நிறுவனங்களும் பிரபலங்களும் ஒரு வார்த்தையில் ட்வீட் செய்து வந்தனர். தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும் இந்த ட்ரெண்டில் குதித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'திராவிடம்' என ட்வீட் செய்ததை அடுத்து, அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் 'எடப்பாடியார்' என ட்வீட் செய்தது.

சசிகலாவின் ஒற்றுமை ட்வீட்
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'தமிழ்நாடு' என ட்வீட் செய்தார். சசிகலா தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், 'ஒற்றுமை' என ட்வீட் செய்தார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், 'அம்மா' என ட்வீட் செய்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் 'தொண்டர்கள்' என ட்வீட் செய்துள்ளார்.

ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்
இந்நிலையில், அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ் - ஈபிஎஸ் குழப்பத்திற்கு மத்தியில் சசிகலாவின் 'ஒற்றுமை' ஒற்றை வார்த்தை ட்வீட் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர், "நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம். அதிமுகவை பொறுத்தவரை ஒற்றுமையாக உள்ளது என நீதிமேன்றமே தீர்ப்பளித்துவிட்டது. நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு கருத்து சொல்ல விவாதிக்க ஒன்றும் இல்லை" எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான தீர்ப்பு
மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அதிமுகவை பொறுத்தவரை உச்ச நீதிமன்றம் வரை சென்று உயர் நீதிமன்றம் இன்றைக்கு தெளிவான வரிக்கு வரி தெளிவான புரியாதவர்கள், தெரியாதவர்கள் எல்லாம் புரிந்து கொள்ளும் வகையில் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதிமுக எடப்பாடி பழனிசாமியை ஏகமனதாக இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.

எடப்பாடிக்கு பல வேலைகள்
எடப்பாடி பழனிசாமிக்கு பல பணிகள் உள்ளன. திமுக மறந்துள்ள பணிகளை ஞாபகப்படுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது. திமுகவினர் முதலில் எட்டு வழிச்சாலையை எதிர்த்தார்கள், தற்போது ஆதரிக்கிறார்கள். எட்டு வழிச்சாலையை காலத்தின் கட்டாயம் எனப் பேசுகிறார்கள். 6 பேர் விடுதலை தற்போது வரை கேள்விக்குறியாக உள்ளது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது நாங்களே விடுதலை செய்வோம், நாங்கள் விடுதலையை முன்னெடுத்து செல்வோம் என பேசினார்கள். ஆனால் தற்போது வாய்மூடி மவுனியாக உள்ளனர்.

டாஸ்மாக்
டாஸ்மாக் கடையை மூட குடும்பத்தோடு போராட்டம் நடத்திய நிலையில் தற்போது பள்ளி, கல்லூரி, கோவிலுக்கு அருகே இடமாற்றம் என்ற பெயரில் மதுக்கடைகளை அமைக்கிறார்கள். இன்றைக்கு நில எடுப்பு பணிகள் கூட திமுகவால் செய்ய முடியவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் 11 மருத்துவக் கல்லூரிகளுக்கு அதிமுக ஆட்சியில் நிலம் எடுப்பு பணிகளில் சிறு சலசலப்பு கூட எற்படவில்லை. புதிய விமான நிலைய விரிவாக்கம் வாழ்வாதாரத்தை எந்தளவு கேள்விக்குறியாக்கி உள்ளது என்பதை மக்கள் பார்த்து கொண்டுள்ளனர்.

ஸ்தம்பித்துப்போன திமுக அரசு
திமுக அரசு ஸ்தம்பித்துப் போய் உள்ளது. இந்த தீர்ப்புக்கு பிறகு அதிமுக எடப்பாடி பழனிசாமி தலைமையில் திமுக அரசை தோலுரித்து காட்டுவதற்கும், மீண்டும் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவற்கும் உத்வேகத்தோடு உற்சாகத்தோடு தொண்டர்கள் உழைக்க தயாராகி விட்டனர். முழுவேகத்தில் சிறப்பாகச் செயல்பட தயாராகி கொண்டுள்ளனர்." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications