கொரோனா அச்சத்தில் இருவர் தற்கொலை.. சிகிச்சையில் இருவர் - மதுரையில் சோகம்
மதுரை : கொரோனா அச்சம் காரணமாக மதுரை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற நிலையில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை தற்போது இந்தியாவில் தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டுகளைப் போல இல்லாமல் இந்த ஆண்டு ஜனவரி மாதத்திலேயே கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. தமிழகத்தில் 600க்குள் இருந்த பாதிப்பு தற்போது ஏழு ஆயிரத்தை தாண்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதையடுத்து இரவு நேர ஊரடங்கு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கையும் பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மதுரை அருகே குழப்பம் காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சம்
கொரோனா பரவல் காரணமாக பொருளாதார ரீதியாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டு இருந்தாலும் வீட்டு தனிமை, பயம், வேலையிழப்பு உள்ளிட்டவை காரணமாக ஏராளமானோர் மன உளைச்சலில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கடந்த ஆண்டுகூட மதுரை ராமநாதபுரம் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா அச்சம் காரணமாக தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வந்தன

தமிழக அரசு நடவடிக்கை
இதையடுத்து தமிழக அரசு சார்பில் சிறப்பு தொலைபேசி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டது தொடர்ந்து அச்சத்தை நீக்குவதற்காக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன இது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன இதற்காக சிறப்பு மனநல மருத்துவர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கி வந்தனர்.

மதுரையில் அதிர்ச்சி
தற்போது இதுபோன்ற சம்பவங்கள் குறைந்துள்ள நிலையில் மதுரையில் பெண்ணொருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் குடும்பத்தினருடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் சிலைமான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட கல்மேடு பகுதி அருகே எம்ஜிஆர் நகரைச்சேர்ந்தவர் ஜோதிகா, இவர் தனது தாய் மற்றும் தம்பிகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். முன்னிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஜோதிகாவிற்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குடும்பத்தினருடன் தற்கொலை
இதனால் மனம் விரக்தியடைந்த ஜோதிகா தனது தாய் மற்றும் தம்பிகளுடன் சாணி பவுடரைக் கரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஜோதிகா மற்றும் தம்பி ரித்தீஸ் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டனர். மேலும் அவரது தாய் மற்றொரு தம்பி ஆகிய இரண்டு பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த தற்கொலை சம்பவம் குறித்து சிலைமான் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications