மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை... சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்
மதுரையில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மதுரை: தென்மேற்குப் பருவமழை தென்மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் மதுரையில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித்தீர்த்தது. இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் ஆறாக பெருக்கெடுத்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை தொடங்கி விட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது. தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
வானிலை மையம் கணித்தது போல மதுரையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் குளிர்ந்த காற்று வீசிய நிலையில் மாலை 4 மணிக்கு மேல் காற்றுடன் கனமழை பெய்தது.
மதுரை மாநகர் பகுதிகளான அண்ணா நகர், கோரிப்பாளையம், சிம்மக்கல், பெரியார், காமராஜர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டு மணி நேரமாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
கொட்டித்தீர்த்த கனமழையால் நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. கனமழையால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவியது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போல திண்டுக்கல் நகரிலும் கனமழை பெய்ததால் வெள்ளநீர் சாலைகளில் பெருக்கெடுத்தது. அடுத்த 2 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.