பிண அரசியல் செய்பவர்கள் பற்றி பேச விரும்பவில்லை.. காலணி வீசிய பாஜகவினரை கடுமையாக தாக்கிய பிடிஆர்
மதுரை: பாஜகவினர் கார் மீது காலணி வீசியது குறித்த கேள்விக்கு, ‛‛ தியாகியை நல்லடக்கம் செய்த நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் பற்றி பேச விரும்பவில்லை'' என பாஜகவை கடுமையாக விமர்சித்து தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
Recommended Video
ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் வீர மரணமடைந்தனர்.
இதில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணனும் வீரமரணம் அடைந்தார். இவரது உடல் காஷ்மீரில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது அடக்கம் செய்யப்பட்டது.
பிடிஆர் கார் மீது காலணி வீச்சு.. மதுரையில் திமுக ரயில் மறியல்.. பாஜகவுக்கு எதிராக கோஷம்-பரபரப்பு
கார் மீது காலணி வீச்சு
முன்னதாக இன்று மதியம் அவரது உடல் மதுரை விமான நிலையத்தில் வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்த வேளையில் மரியாதை செலுத்தும் விவகாரத்தில் பாஜகவினருக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கு இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இதையடுத்து பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசினர்.
பாஜகவினர் கைது
இதற்கிடையே அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசியதாக மதுரை அவனியாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்தனர். மேலும் பாஜகவினரின் செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பாஜகவினரை கடுமையாக கண்டித்துள்ளனர்.
பிடிஆர் பதில்
இந்நிலையில் மதுரை ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள லயோலா ஐடிஐ கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார். இந்த விழாவுக்கு பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பாஜகவினர் நடத்திய தாக்குதல் குறித்த கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தாார்.
பிண அரசியல் செய்யும் பாஜக
அப்போது, ‛‛பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த தியாகியை அடக்கம் செய்வது குறித்து இரண்டு நாட்களாக ராணுவத்தினரை தொடர்புகொண்டு கேட்டறிந்தேன். தியாகியை நல்லடக்கம் செய்யும் நாளில் பிணத்தை வைத்து சாக்கடை அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் பற்றி பேசுவதற்கான சரியான தருணம் இது இல்லை. பிண அரசியல் செய்பவர்கள் குறித்து பேச விரும்பவில்லை. பிணத்தை வைத்து அரசியல் செய்பவர்கள் யார் என்பது தெரியும். பிணத்தை வைத்து அரசியல் செய்யும் நபர்கள் குறித்து நாளை பேசுகிறேன்'' என்றார்
மதுரையில் போராட்டம்
முன்னதாக பாஜகவினரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். குறிப்பாக மதுரை ரயில் நிலையத்துக்குள் நுழைந்து திமுகவினர் ரயில் மறியல் செய்தனர்.திருச்செந்தூர்- பாலக்காடு ரயில் இன்ஜின் மீது ஏறி திமுகவினர் போராட்டம் நடத்தினர். மேலும் மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே திமுகவினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். இதேபோல் மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே திமுக வினர் பாஜக தலைவர் அண்ணாமலையின் கொடும்பாவியை தீயிட்டு எரித்தது குறிப்பிடத்தக்கது.