கிளாஸ் ‘கட்’ அடிச்சிருக்கேன்.. ஆனா இதை மட்டும் நிறுத்துனதே இல்லை- அமைச்சர் பிடிஆர் பகிர்ந்த சீக்ரெட்
மதுரை : வகுப்புகளை 'கட்' அடித்திருக்கிறேன், ஆனால் என்றுமே புத்தக வாசிப்பை கைவிட்டதே இல்லை என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை தமுக்கம் மைதானத்தில் அடுத்த மாதம் 3-ஆம் தேதி வரை புத்தக திருவிழா நடக்கிறது. அதன் தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் தலைமை தாங்க, அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்,
முதல்வர் ஸ்டாலின் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளான சுயமரியாதை, சமூகநீதி, சம உரிமை, எல்லோருக்கும் கல்வி- சம வாய்ப்பு என்ற அடிப்படையில் அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் எனத் தெரிவித்தார்.

திமுகவை விமர்சித்த நட்டா
நேற்று முன்தினம் காரைக்குடியில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, திமுக அரசு தமிழ்நாட்டில் மோசமான அரசியலை முன்னெடுத்துள்ளது. திமுக அரசு தமிழக மக்களை தவறாக வழிநடத்துகிறது. திமுக தேசிய கல்வி கொள்கையை எதிர்ப்பதாக கேள்விப்பட்டேன். நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது அவர்கள் நீட்டை எதிர்த்தனர். திமுகவில் படித்த தலைவர்கள் யாரும் இல்லை. அதனால் தான் அவர்கள் நீட்டை எதிர்க்கின்றனர் என்று தெரிவித்திருந்தார். அதற்கு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பதிலடி கொடுத்திருந்தனர்.

மதுரை புத்தகத் திருவிழா
இந்நிலையில், மதுரையில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவை தொடங்கிவைத்து அரங்குகளைப் பார்வையிட்ட திமுகவைச் சேர்ந்த அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தான் வகுப்புகளை 'கட்' அடித்து இருக்கிறேன் என்றும், ஆனால் புத்தக வாசிப்பை கைவிட்டதே இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் நிதி அமைச்சர் பிடிஆர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

ஸ்டாலின் போட்ட உத்தரவு
அப்போது பேசிய அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கைகளான சுயமரியாதை, சமூகநீதி, சம உரிமை, எல்லோர்க்கும் கல்வி, எல்லோர்க்கும் சம வாய்ப்பு என்ற அடிப்படையில் மக்கள் நலனை தலையாய கடமையாகக் கொண்டு அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் பிற பகுதிகளிலும் அரசு நிதியுதவியுடன் புத்தகத் திருவிழாக்கள் நடத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும்
அதன்படி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI) மூலம் நடத்தப்பட்டு வந்த புத்தகக் கண்காட்சிகள் அரசு அமைப்புகளின் ஒருங்கிணைப்போடு அரசு நிதியுதவியுடள் சிறப்பாக நடத்தப்படுகிறது. மதுரையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடத்தப்படும் இந்த புத்தகத் திருவிழா குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொண்ட அனைத்து அலுவலர்களுக்கும் பாராட்டுகள்.

கட் அடிச்சிருக்கேன்.. ஆனால்
புத்தக வாசிப்பு என்பது மிக அற்புதமான பழக்கம். பள்ளி, கல்லூரி காலங்களில் வகுப்புகளை கட் அடித்திருக்கிறேன். ஆனால் புத்தக வாசிப்பு பழக்கத்தை மட்டும் கைவிட்டதே இல்லை. இரண்டு புத்தகங்களையாவது படித்து விடுவேன். கடந்த முறை புத்தக கண்காட்சி நடைபெற்ற போது 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை விரும்பி வாங்கினேன். மறுபடியும் இந்த கண்காட்சியினை விரிவாக பார்வையிட்டு புத்தகங்களை வாங்கிட ஆவலாக உள்ளேன்.

பாடப் புத்தகம் தாண்டி
பாடப்புத்தகங்களை தாண்டி பிற துறை சார்ந்த நூல்களை வாசிப்பதன் மூலம் உலக நடப்புகள், அரசியல் நிகழ்வுகள், பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அரிய தகவல்களை கற்றறிந்து பயன்பெற முடியும். அந்த வகையில், இந்த புத்தகத் திருவிழாவை பொதுமக்கள், இளைஞகள், மாணவ, மாணவியர்கள் அனைவரும் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications