நம்பி வந்தா கரை சேர்ப்போம்.. நம்பலைனா ஆற்றில் விட்டு விடுவோம்.. செல்லூர் ராஜூ வார்னிங்! யாருக்கு?
மதுரை : கூட்டணிக் கட்சியினரே அதிமுக பற்றி இழிவாக பேசி வருவது மன வருத்தத்தை அளிப்பதாகவும், அதிமுகவை நம்பி வந்தால் கரை சேர்ப்போம், நம்பாமல் இருந்தால் ஆற்றிலே விட்டு விடுவோம் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் நிலவி வரும் ஓபிஎஸ், ஈபிஎஸ் குழப்பத்திற்கு மத்தியில், அதிமுக கூட்டணி கட்சிகளே அதிமுகவின் இந்த நிலையை விமர்சிப்பதாக வேதனை தெரிவித்துள்ளார் செல்லூர் ராஜூ.
மேலும், அதிமுகவை நம்பியவர்கள் கெட்டுப் போனது கிடையாது, நம்பாமல் கெட்டுப் போனவர்கள் தான் அதிகம் என்றும் கூட்டணி கட்சிகளுக்கு உணர்த்தும்படி பேசியுள்ளார்.
ஏற்கனவே செல்லூர் ராஜூ, ஓபிஎஸ் மனம் திருந்தி எங்களோடு இணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறியிருந்த நிலையில், அதிமுக முடங்கிப்போகவில்லை, நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக அண்ணன், தம்பியாகத் தான் பழகி வருகிறோம் என செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
'சிக்னல்’ கொடுத்த ஓபிஎஸ்! கட்சி ஒற்றுமையே பெரிது.. தனிப்பட்ட ஆள் அல்ல! தலைமை அலுவலகத்தை வைத்து மூவ்!
எச்சரிக்கை?
அதிமுகவில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இணைந்து செயல்பட வேண்டும் என பாஜக தலைமை விரும்புவதாகவும், நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற ஓபிஎஸ் ஈபிஎஸ் இருவரும் சேர்ந்து இருக்கும் கூட்டணியே பாஜகவின் சாய்ஸ் எனக் கூறப்படும் நிலையில், எங்களை நம்பி வந்தால் கரை சேர்ப்போம், நம்பாமல் இருந்தால் ஆற்றிலே விட்டு விடுவோம். அதுதான் அதிமுக. அதிமுகவை நம்பியவர்கள் கெட்டுப் போனது கிடையாது. நம்பாமல் கெட்டுப் போனவர்கள் தான் அதிகம் எனப் பேசியுள்ளார் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரான செல்லூர் ராஜூ.
அதிமுக மாஜி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற உள்ளது. அது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டு கட்சியினருக்கு ஆலோசனை வழங்கினார்.
கூட்டணி கட்சிகளே - ஆற்றில்விட்டு விடுவோம்
அப்போது பேசிய அவர், "நமது தோழமைக் கட்சிகளே நம்மைப் பற்றி இழிவாகப் பேசுகிறார்கள். அது மன வருத்தத்தை அளிக்கிறது. அதிமுக முடங்கிப் போய்விட்டது என சொல்லுகிறார்கள், பார்ப்பவர்களின் கண்ணோட்டம் தான் அப்படி உள்ளதே தவிர நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக அண்ணன், தம்பியாகத் தான் பழகி வருகிறோம். நாங்கள் பனங்காட்டு நரிகள், எதற்கும் அஞ்சமாட்டோம். அதிமுகவை நம்பி வந்தால் கரை சேர்ப்போம். நம்பாமல் இருந்தால் ஆற்றிலே விட்டு விடுவோம். அதுதான் அதிமுக.
நம்பாமல் கெட்டவர்கள்
அரசியலில் பதற்றமான சூழ்நிலை கிடையாது. அதிமுகவை நம்பியவர்கள் கெட்டுப் போனது கிடையாது. நம்பாமல் கெட்டுப் போனவர்கள் தான் அதிகம். தலைமை என்ன சொல்கிறதோ அதைக் கேட்டு தான் அதிமுக தொண்டன் செயல்படுவான். எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொட்டு தலைவர்களை நம்பி இந்த இயக்கம் கிடையாது. இரட்டை இலையும் அதிமுக கொடியும் எங்கு உள்ளதோ அங்கு தான் உண்மையான அதிமுக தொண்டன் இருப்பான்.
அமைச்சர்கள் ஒற்றுமை இல்லை
அதிமுகவை விட்டு பிரிந்து போனவர்கள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதிமுகவை அடிமை எனக் கூறிவிட்டு அடிமைக்கு அடிமையாக திமுக இருந்து வருகிறது. அதிமுகவில் சீனியர், ஜூனியர் பாகுபாடு இல்லை. தி.மு.க அமைச்சர்களிடத்தில் ஒற்றுமை இல்லை. அணில் அமைச்சர் தற்போது ஆதார் அமைச்சர் ஆகிவிட்டார்.
அமைச்சர்களால் தூக்கம் போச்சு
மக்களைப் பற்றி நினைத்து தூக்கம் வரவில்லை என்றால் பரவாயில்லை, ஆனால் திமுக அமைச்சர்கள் என்ன பேசுவார்கள் என்ற பயத்தில் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார் முதலமைச்சர். பொது விழாக்களில் அமைச்சர்கள் பேசும் அவதூறு பேச்சுக்களை முதல்வர் ஸ்டாலின் கண்டிக்கவில்லை. அதிமுக ஆட்சியை பற்றி பேச முதல்வருக்கு தகுதி உள்ளதா? நிதி அமைச்சருக்கு வெட்கம் இல்லையா? அதிமுக கொண்டு வந்த திட்டங்களை குறை கூறிவிட்டு அதே திட்டங்களை இப்போது அவர்களும் தொடங்கி வைக்கின்றனர்" என விமர்சித்தார்.
குடிக்க கஞ்சி இல்லாமல்
தொடர்ந்து பேசிய அவர், மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதாக கூறும் நிதியமைச்சர், அப்படி ஊழல் நடந்திருந்தால் 2 வருடத்தில் நிரூபித்து இருக்கலாமே? குடிக்க கஞ்சி இல்லாமல் மக்கள் இருக்கும்போது 100 கோடியில் நூலகம், எழுதாத பேனாவிற்கு 80 கோடி பேனாவை கடலில் வைக்கிறார்கள். கட்சிக்கு அப்பாற்பட்டு, கருணாநிதியை வணங்குவோம். அதிமுக பத்தாண்டு கால ஆட்சி சரி இல்லை எனக் கூறினார்கள். இந்த 2 ஆண்டில் திமுக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடுகிறதா?" எனக் கேள்வி எழுப்பினார்.
என்னங்க நியாயம்
மேலும், ரோம் நகரம் தீப்பற்றி எரியும்போது மன்னர் பிடில் வாசித்தது போல் தமிழகத்தில் மழை வெள்ளத்தில் மக்கள் தவிக்கும் போது தனது மகன் நடித்த திரைப்படத்தை பார்த்தீர்களா என்று அமைச்சரிடம் விசாரிப்பது என்னங்க நியாயம் இதற்காக தான் மக்கள் உங்களை முதல்வராக தேர்ந்தெடுத்தார்களா? எனக் கேள்வி எழுப்பினார்.
அதிமுக - பெண்கள்
நடிகை குஷ்புவுக்கு கோவில் கட்டி கும்பிட்ட தமிழ்நாட்டில் அவரை தாழ்த்தி தரக்குறைவாகப் பேசிய திமுக நிர்வாகியை கண்டிக்க திமுகவிற்கு வக்கு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினார். மேலும், திமுகவினர் பெண்களை தரம் தாழ்த்தி பேசி வருகிறார்கள். பெண்களுக்கு சமத்துவமாக இடம் கொடுத்த ஒரு கட்சி என்றால் அது அதிமுகதான். பெண்களுக்காக பல திட்டங்களை அதிமுக அரசு கொண்டு வந்தது எனத் தெரிவித்தார்.