2வது நாளாக பரபர ரெய்டு.. கான்டிராக்டர்களின் அலுவலகங்களில் சல்லடை போடும் ஐடி அதிகாரிகள்..!
மதுரை : மதுரை மற்றும் திண்டுக்கல்லில் ஒப்பந்ததாரர்கள் அலுவலகங்கள், கட்டுமான நிறுவனங்களில் இரண்டாவது நாளாக இன்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மதுரை அவனியாபுரத்தில் உள்ள கட்டுமான நிறுவனங்களில் 2வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 13ஆம் தேதி செய்யாதுரை உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற ரெய்டின்போது கணக்கில் வராத ரூ.500 கோடி சிக்கியதாக கூறப்பட்ட நிலையில், மீண்டும் அதிரடி ரெய்டுகள் அரங்கேறி வருகின்றன.
இளம்பெண்ணை காவு வாங்கிய கல்லட்டி! அடுத்தடுத்து பலியான ஐடி பெண்கள்! என்ன நடக்கிறது அந்த பங்களாவில்?
ஒப்பந்ததாரர்கள்
தமிழக அரசின் பல்வேறு துறை ஒப்பந்தங்களை எடுத்து பணி செய்து வரும் சுமார் 20 அரசு ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்கள் கடந்த அதிமுக ஆட்சியில் அதிகமான டெண்டர்களை எடுத்துப் பணியாற்றிய நிறுவனங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வருமான வரி
இந்த நிறுவனங்களில் முறையாக வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்யாமல் பல கோடி ரூபாய்க்கு வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக சென்னையில் உள்ள வருமான வரித்துறை புலனாய்வு பிரிவுக்கு தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று சென்னையில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் மதுரை வந்தனர்.
திடீர் ரெய்டு
மதுரையில் உள்ள வருமானவரித்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் அவனியாபுரம், வில்லாபுரம், திருப்பாலை, திருப்புவனம் ஆகிய இடங்களில் உள்ள ஒப்பந்ததாரர் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களிலும், நிறுவனங்களின் உரிமையாளர்கள் வீடுகளிலும் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இரண்டாவது நாளாக
இன்றும் இரண்டாவது நாளாக ஐடி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மதுரை அவனியாபுரத்தில் உள்ள ஜெயபாரத் மற்றும் கிளாட்வே சிட்டி புரோமோட்டர் வீடு மற்றும் அலுவலகங்களில் இரண்டாவது நாளாக இன்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். சுமார் 10 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்திலும்
இதேபோல, திண்டுக்கல் மாவட்டத்திலும் ஐடி அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சின்ன கரட்டுப்பட்டி மற்றும் மார்க்கம்பட்டி ஆகிய இரு பகுதிகளில் ஆர் ஆர் இன்ஃப்ரா ப்ளூ மெட்டல் கன்ஸ்ட்ரக்ஷனில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
நேற்று காலை முதல்
மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசின் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் சுமார் 20 அரசு ஒப்பந்ததாரர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. நேற்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ச்சியாக
சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த காண்டிராக்டர் செய்யாதுரையின் வீடு, அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி மதிப்புள்ள கணக்கில் வராத பணம், சொத்து ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. செய்யாதுரை தொடர்புடைய பல இடங்களிலும் தொடர்ச்சியாக சோதனையில் ஈடுபட்டது வருமான வரித்துறை. இந்நிலையில், மதுரையை மையமாகக் கொண்டு செயல்படும் பல்வேறு நிறுவனங்களுக்கு குறி வைக்கப்பட்டுள்ளது.