ஒருபக்கம் டைடல் பார்க்.. இன்னொரு பக்கம் ஜல்லிக்கட்டு மைதானம்.. மதுரையில் அதிரடி காட்டும் திமுக!
மதுரை: 2024ம் ஆண்டுக்குள் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கும் பணிகள் முடிவடையும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் உலக பிரசித்திப் பெற்றது. இதனால் ஜல்லிக்கட்டு போட்டிகளை அனைவரும் கண்டுகளிக்கும் வகையில் பிரம்மாண்டமான மைதானம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதனைத்தொடர்ந்து பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் கட்டுவதற்கான இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் கீழக்கரை அருகே ஆய்வு செய்தனர்.
”சென்னை - குமரி சாலையை 6 அல்லது 8 வழிச்சாலையாக மேம்படுத்துவது அவசியம்” அமைச்சர் எ.வ.வேலு!
அமைச்சர் எ.வ.வேலு பேட்டி
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு கூறுகையில், "தென்னக மக்களின் மனம் நிறைவடையும் வகையில் அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு மைதானம் விரைவில் அமைத்து விடுவோம். ஜல்லிக்கட்டு நடைபெறும் அலங்காநல்லூர் பகுதியின் அருகிலேயே மைதானம் அமைக்க வேண்டும் என கேட்டுகொண்டதன்படி தற்போது இந்த இடத்தை தேர்வு செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.
வனப்பகுதி கையகப்படுத்தப்படாது
தொடர்ந்து, இங்கு அரசின் மேய்ச்சல்கால் புறம்போக்கு 66 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் முதற்கட்டமாக 16 ஏக்கர் நிலம் தேவைப்படும் அதற்கு என்னென்ன அனுமதிகள் தேவையோ, அவற்றை எல்லாம் பெற்று மைதானம் அமைக்கும் பணியை தொடங்கிடுவோம். இந்த இடம் வனப்பகுதி ஒட்டிய அரசு இடமாக இருந்தாலும், எந்தச் சூழலிலும் வன இடத்தை அரசு கையகப்படுத்தாது.
குளம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்
மலையில் இருந்து வரக்கூடிய தண்ணீர் தேங்கும் அளவிற்கு இங்கு 66 ஏக்கர் குளம் ஒன்று உள்ளது. பயனாளிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வகையில் குளத்தையும் சீர் செய்து அழகுறச் செய்யலாம் என்ற முடிவும் எடுக்கப்பட்டு வளாகம் அமையும்போது, குளமும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று உறுதி தெரிவித்தார்.
2024ல் மைதானம்
அதேபோல், முதலமைச்சரின் அனுமதியும், நிர்வாக ஒப்புதலும் பெற்று விரைந்து முடிக்கக்கூடிய வகையில் முறையாக ஒப்பந்தம் விடப்படும். தொடர்ந்து நாளை முதல் வருவாய்த் துறையினர் அளவீடுகள் செய்து, தொடர்ந்து சீர் செய்யும் பணிகள் தொடங்கும். 2024ம் ஆண்டுக்குள் இந்த இடத்தில் கட்டுமான பணிகளை முடிப்பதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் இரவு பகல் பார்க்காமல் பணிகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.