கீழடி: கொந்தகையில் முதுமக்கள் தாழியில் மனித எலும்புக்கூடு - ஆணா, பெண்ணா என ஆய்வு
கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வின்போது கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியில் இருந்து இன்று எலும்புக்கூடுகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன.
மதுரை: கீழடி அருகே உள்ள கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வின்போது கண்டறியப்பட்ட முதுமக்கள் தாழியில் இருந்து இன்று எலும்புக்கூடுகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. இதை மரபணு ஆய்வு செய்தபிறகே எலும்புக்கூட்டின் காலம், வயது, ஆணா, பெண்ணா என தெரியவரும்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் அமைந்துள்ள கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய 4 இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கொந்தகையில் தமிழக தொல்லியல் துறையின் சார்பாக நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் செங்கல் கட்டுமானம், விலங்கு எலும்பு, மனித எலும்புகள், மண் பானைகள், ஓடுகள், சிறிய உலைகலன், எடைக் கற்கள், நீள வடிவ பச்சை நிற பாசிகள் மற்றும் 3 குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த ஆண்டு கொந்தகை அகழாய்வில் 4 குழந்தைகளின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இதை மரபணு ஆய்வு செய்தபிறகே எலும்புக்கூட்டின் காலம், வயது, ஆணா, பெண்ணா போன்ற விபரங்கள் தெரியவரும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இங்கு முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. முழுவதும் மூடப்பட்ட இந்தத் தாழிகளில் உள்ள எலும்பு கூடுகளை ஆய்வுக்காக வெளிக்கொணரும் பணி இன்று நடைபெற்றது.
மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபணுவியல் துறைப் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர் திரு குமரேசன் தலைமையில் இப்பணி துவங்கியது.
தமிழகத்தில் 24 மணிநேரத்தில் 13,776 பேருக்கு கொரோனா பாதிப்பு- 78 பேர் மரணம்; 8078 பேர் டிஸ்சார்ஜ்
இணை இயக்குனர் பாஸ்கர், அகழாய்வு பணிகளில் ஆலோசகர் சேரன் ஆகியோர் உள்ளிட்ட தொல்லியல் அலுவலர்களின் முன்பாக இன்று முதுமக்கள் தாழிகளில் உள்ள எலும்புக்கூடுகள் ஆய்வுக்காக எடுக்கப்பட்டன. ஆரம்பநிலை ஈமச் சின்னங்களான முதுமக்கள் தாழிகள், கொந்தகை அகழாய்வில் தொடர்ந்து கிடைத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காலம் குறித்த தகவல்களுக்காக எலும்புக்கூடுகளை எடுத்துச் சென்று மதுரை காமராசர் பல்கலைக்கழகம் மூலமாக மூலக்கூறு ஆய்வுகள் நடத்தப்படும் என அலுவலர்கள் மற்றும் மரபணு துறை பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.