வந்தால் வரவேற்போம்- பாஜக.. அதெல்லாம் இல்லை.. இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை- மு.க.அழகிரி அதிரடி
மதுரை: அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என மு.க. அழகிரி தெரிவித்துள்ளார்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் மத்திய அமைச்சராக இருந்தவர் மு.க. அழகிரி. கடந்த 2014-ஆம் ஆண்டு திமுக தலைவரும் தந்தையுமான மு கருணாநிதியுடன் அழகிரிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போது மு.க. அழகிரி யாருக்காவது வாய்ஸ் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அவ்வாறு ஏதும் செய்யவில்லை.
விசுவாசிகளையே 6 மாதமாக பார்க்கவில்லை.. தனிக்கட்சி திட்டம்
திமுகவில் இணைவார்
இந்த நிலையில் கருணாநிதி மறைவுக்கு பிறகு அவர் மீண்டும் திமுகவில் இணைவார் என சொல்லப்பட்டது. ஆனால் அவரை ஏற்க முடியாது என திமுக மூத்த தலைவர்கள் தெரிவித்துவிட்டார்கள். இந்த நிலையில் ரஜினியுடன் சில நேரங்களில் நடத்திய சந்திப்புக் கூட்டங்களால், ரஜினி தொடங்கும் கட்சியில் அழகிரி இணைகிறார் என செய்திகளும் பரவலாக பேசப்பட்டன.
தேர்தல்
தற்போது 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடக்கிறது. இதனால் திரை மறைவில் இருந்த அரசியல் தலைவர்கள் தற்போது வெளிச்சத்திற்கு வரத் தொடங்கிவிட்டார்கள். அந்த வகையில் மு.க. அழகிரியும் தனது ஆதரவாளர்களுடன் 20-ஆம் தேதி ஆலோசனை நடத்துவதாக அறிவிக்கப்பட்டது.
பாஜகவில் இணைகிறாரா அழகிரி?
இந்த ஆலோசனை தேதிக்கு அடுத்த நாளே அதாவது 21ஆம் தேதி மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வருகை தரவுள்ளார். எனவே 20-ஆம் தேதி ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தும் அழகிரி, 21 ஆம் தேதி அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் என்ற தகவல்கள் தீயாய் பரவின.
வந்தால் வரவேற்போம்
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் எல் முருகனிடம் கேட்ட போது மு. க. அழகிரி பாஜகவுக்கு வந்தால் வரவேற்போம். தற்போது ஏராளமான தலைவர்கள் பாஜகவுக்கு வருகை தருகிறார்கள். அது போல் அழகிரியும் வந்தால் வரவேற்போம். ஆனால் நாங்கள் அவரிடம் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்றார்.
ஆலோசனைக்கு பிறகே அறிவிப்பு
எல் முருகனின் பேட்டி குறித்து மு.க. அழகிரியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் அரசியல் நிலைப்பாடு குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஜனவரி அல்லது அதற்கு மேல் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்துவேன். அதன் பிறகு அரசியலில் அடுத்தக் கட்ட நகர்வுகளை அறிவிப்பேன் என்றார் அழகிரி.